தமிழ் சினிமாவில் சுஜாதா. நினைவு தின சிறப்பு பார்வை

  • IndiaGlitz, [Monday,February 27 2017]
தமிழ் இலக்கியத்தில் புதுமையை புகுத்தி, விஞ்ஞானத்தையும் இலக்கியத்தையும் ஒரு பாலமாக இணைத்தவர் காலத்தால் மறவாத எழுத்தாளர் சுஜாதா என்றால் அது மிகையாகாது. அவரது சிறுகதைகளுக்கும், நாவல்களுக்கும் வெறித்தனமான வாசகர்கள் ஒருகாலத்தில் இருந்தனர். இப்போதும்கூட புத்தக கண்காட்சியில் சுஜாதா எழுதிய புத்தகங்கள் அதிகளவில் விற்பனை ஆவதுண்டு.
பத்திரிகை துறையில் சாதித்தது போலவே திரையுலகிலும் தனது பங்களிப்பை அவர் பெருமளவில் ஏற்படுத்தியவர். அவரது எழுத்தின் சுவாரஸ்யத்தை திரையில் 100% பார்க்க முடியாது என்றாலும் இயக்குனர்கள் முடிந்தவரை அவரது கதைகளை இயக்கிய படங்கள் ஏராளம். அவற்றில் சிலவற்றை பார்ப்போம்
1. எந்திரன்: சுஜாதாவின் 'என் இனிய இயந்திரா' நாவல்தான் 'எந்திரன்' கதைக்கு அடிப்படை. இந்த படத்திற்கு சுஜாதா வசனம் எழுத ஒப்புக்கொண்டார். இதற்கு முன்னரே ஷங்கர் இயக்கிய இந்தியன், முதல்வன், பாய்ஸ், அன்னியன் ஆகிய படங்களுக்கு அவர் வசனம் எழுதியதாலும், இந்த கதையின் மூலம் சுஜாதாவின் கதை என்பதாலும் சுஜாதா இந்த படத்திற்கு வசனம் எழுதினார். ஆனால் எதிர்பாராத விதமாக இந்த படத்தின் வசனங்களை முழுவதும் முடிப்பதற்குள் அவர் காலமாகிவிட்டதால், அவர் விட்டுச்சென்றதை மதன்கார்க்கி முடித்து வைத்தார்.
2. ஆனந்த தாண்டவம்: சுஜாதா எழுதிய காதல் நாவல்களில் மிகச்சிறந்தது என்று அவரது வாசகர்களால் போற்றப்பட்ட நாவல் 'பிரிவோம் சந்திப்போம்'. வாசகர்களின் தொடர் வற்புறுத்தல் காரணமாக இந்த நாவலின் இரண்டாம் பாகத்தையும் சுஜாதா எழுதினார். அந்த அளவுக்கு புகழ் பெற்ற இந்த நாவல் 'ஆனந்த தாண்டவம்' என்ற பெயரில் படமாக்கப்பட்டது. ஒரு பெண்ணின் காதல் தடுமாற்றத்தை இதைவிட அழகாக வேறு படத்தில் கூறியிருக்க முடியாது. தமன்னாவின் கேரக்டர் மிக அற்புதமாக இருந்த போதிலும், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை
3. சிவாஜி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் முதன்முதலில் இணைந்த இந்த திரைப்படம் கோலிவுட் திரையுலக வியாபாரத்தை புரட்டி போட்டது. இந்த படம் பெற்ற வெற்றியால்தான் பெரிய பட்ஜெட் படங்கள் தைரியமாக தமிழ் சினிமாவில் உருவானது. சுஜாதாவின் அனல்பறக்கும் வசனங்கள் படத்திற்கு முதுகெலும்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
4. கன்னத்தில் முத்தமிட்டால்: இலங்கைத் தமிழர் பிரச்சனையை மையமாக கொண்டு பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய உணர்வுபூர்வமான படம்தான் 'கன்னத்தில் முத்தமிட்டால்'. பொதுவாக மணிரத்னம் படங்களில் மிகச்சுருக்கமாகத்தான் வசனங்கள் இருக்கும். அந்த சுருக்கத்திலும் ஒரு வீரியம் இருக்கும் என்பதை நிரூபணம் செய்தது சுஜாதாவின் வசனங்கள்.
5. இந்தியன்: உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் இணைந்த இந்த படத்திற்கும் சுஜாதா வசனம் எழுதினார். லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்பதை அழுத்தமான வசனங்கள் மூலம் அவர் படத்திற்கு உயிரூட்டினார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற சுஜாதாவின் வசனங்கள் ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

6. ரோஜா: மணிரத்னம் இயக்கிய படங்களில் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்று 'ரோஜா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான இந்த படம், காஷ்மீர் தீவிரவாதிகள் குறித்த பிரச்சனையை மையமாக கொண்டது. சுஜாதாவின் தேசப்பற்று மிக்க வசனங்கள், தீவிரவாதிகளின் பக்கம் இருக்கும் ஒருசில நியாயம் ஆகியவை இந்த படத்தின் ஹைலைட்.
7. விக்ரம்: உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து தயாரித்த இந்த படத்தின் கதை, வசனம் எழுதியவர் சுஜாதா. இந்த கதை பிரபல வார இதழ் ஒன்றில் வெளிவந்து கொண்டிருக்கும்போதே படமும் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கம்ப்யூட்டர் டெக்னாலஜியை இந்திய சினிமாவில் அறிமுகம் செய்தது இந்த படம் தான் என்று கூறலாம்.
8. நினைத்தாலே இனிக்கும்: சுஜாதாவின் கதைக்கு இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் திரைக்கதை எழுதி இயக்கிய படம். கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் இணைந்து நடித்து வெளிவந்த கடைசி படம். முழுக்க முழுக்க ஜாலியான திரைக்கதையுடன் ஒருசில திருப்பங்களுடன் கூடிய இந்த படத்தின் வெற்றிக்கு சுஜாதாவின் கதை எப்படி ஒரு காரணமோ, அதேபோல் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை இன்னொரு காரணமாக அமைந்தது.
9. ப்ரியா: 'ப்ரியா' என்ற தலைப்பில் சுஜாதா எழுதிய நாவல் அதே பெயரில் படமாக்கப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எஸ்.பி.முத்துராமன் இந்த படத்தை இயக்கினார். சுஜாதாவின் புகழ்பெற்ற கேர்கடர்களான கணேஷ்-வசந்த் கேரக்டர்களில் ரஜினிகாந்த் கணேஷ் கேரக்டரில் நடித்திருந்தார். இந்த கதையின் சம்பவங்கள் அனைத்தும் லண்டனில் நடப்பதுபோல் சுஜாதா கதை எழுதியிருந்தார். ஆனால் பட்ஜெட் காரணமாக இந்த படம் சிங்கப்பூரில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வசந்த் கேரக்டரில் நடித்தவருக்கு பாஸ்போர்ட் கிடைக்காததால் அவர் பாதியிலேயே இந்த படத்தில் இருந்து காணாமல் போய்விடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
10. காயத்ரி: சுஜாதா எழுதிய 'காயத்ரி' நாவல் தான் இந்த படம். ரஜினிகாந்த் ஆரம்பகட்டத்தில் வில்லனாக நடித்த படங்களில் ஒன்று இந்த படம். ஸ்ரீதேவியின் கணவராக நடித்திருந்த அவர் மனைவியையே ஆபாச படம் எடுக்கும் கேரக்டரில் நடித்திருந்தார். விறுவிறுப்பு மற்றும் சஸ்பென்ஸ் உடன் செல்லும் இந்த படத்தில் ஸ்ரீதேவி, ஜெய்சங்கர் உள்பட பலர் நடித்திருந்தனர்.
சுஜாதா அவர்களின் மறைவு எழுத்து துறைக்கு மட்டுமின்றி சினிமா துறைக்கும் பேரிழப்புதான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தற்போது அடைந்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சியை அவர் இருபது வருடங்களுக்கு கோடிட்டு காட்டிய தீர்க்கதரிசியாக இருந்தவர். இன்று அவர் இருந்திருந்தால் இன்னும் இருபது வருடங்களுக்கு பின்னர் வரவுள்ள தொழில்நுட்பத்தை நமக்கு திரைப்படங்கள் மூலமும், எழுத்துக்கள் மூலமும் தெரிவித்திருப்பார். இருப்பினும் அவர் விட்டு சென்ற எழுத்துக்கள் காலத்தால் அழியாதது என்பது தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ் சினிமாவிற்கும் பெருமைதான்

More News

விஜய்-சூர்யா படங்களின் முக்கிய ஒற்றுமை

இந்த ஆண்டு வெளிவரும் படங்களில் பெரும் எதிர்பார்ப்புக்குள்ள படங்களில் இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'விஜய் 61' மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்'

ரூ.100 கோடி கிளப்பில் சூர்யாவின் 'சி 3'. முழுவசூல் விபரங்கள்

சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஹரி இயக்கிய 'சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'சி 3' திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல ஓப்பனிங் வசூல் கொடுத்த நிலையில் தற்போது இந்த படம் ரூ.100 கோடி கிளப்பிலும் இணைந்துள்ளது

விஜய் ஆண்டனியின் 'எமன்' தமிழக வசூல் எவ்வளவு?

விஜய் ஆண்டனி நடித்த 'எமன்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நெடுவாசல் உண்ணாவிரதத்தில் பிரபல இயக்குனர் பங்கேற்பு

புதுக்கோட்டை அருகில் உள்ள நெடுவாசல் பகுதியில் மீத்தேன் என்ற ஹைட்ரோகார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

ஆஸ்கர் சிறந்த படம் விருதில் திடீர் சொதப்பல். ஏமாற்றம் அடைந்த 'லா லா லேண்ட்' படக்குழு

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த சில மணி நேரமாக ஆஸ்கர் விருது வென்ற கலைஞர்கள், திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறந்த பட விருது அறிவிக்கப்பட்டதில் ஏற்பட்ட சொதப்பலால் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது...