4 டோஸ் தடுப்பூசி போட்டும் இளம்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு!

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியைச் சேர்ந்த 30 வயதான இளம்பெண் ஒருவருக்கு 4 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது அதிகாரிகள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக உலகம் முழுக்கவே மீண்டும் கொரோனா அச்சம் தலைத்தூக்கியிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்தில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அந்த அடிப்படையில் ஒவ்வொரு விமானப் போக்குவரத்திற்கு முன்பும் ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை முடிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ரேப்பிட் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இப்படி பலத்தப் பாதுகாப்புக்கு மத்தியில் இந்தூரில் இருந்து 30 வயதான பெண் ஒருவர் துபாய்க்கு புறப்பட இருந்தார். ஏற்கனவே 48 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் சோதனையில் அந்தப் பெண்ணிற்கு நெகடிவ் ரிசல்ட் வந்திருக்கிறது. இதையடுத்து துபாய் விமானத்தில் ஏற இருந்த அந்தப் பெண்ணிற்கு ரேபிட் பரிசோதனை செய்தபோது மீண்டும் கொரோனா பாசிடிவ் என ரிசல்ட் வந்ததையடுத்து கடும் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் மற்ற பயணிகளுக்கும் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் அந்த இளம்பெண்ணின் கொரோனா தடுப்பூசி குறித்த விவரங்களை சேகரித்த மருத்துவர்கள் கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். காரணம் அந்த இளம்பெண் ஏற்கனவே சீனாவின் 2 டோஸ் சினோஃபார்ம் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார். ஆனால் இந்த மருந்திற்கு WHO அங்கீகாரம் பெறப்படவில்லை. இதனால் அவர் மீண்டும் அமெரிக்காவின் 2 டோஸ் ஃபைசர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார்.

தற்போது இந்தியாவிற்கு வந்துள்ள அந்த இளம்பெண் இந்தூர் பகுதியில் திருமணம் ஒன்றில் கலந்துகொண்ட பிறகு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த மருத்துவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் பாதிப்பு வரலாம். ஆனால் குறைந்த அளவிலான பாதிப்பே ஏற்படும். எனவே அனைவரும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.