குடிபோதையில் போலீசாரை எட்டி உதைத்த பெண் துணை இயக்குனர்: சென்னையில் பரபரப்பு!

  • IndiaGlitz, [Monday,December 07 2020]

பெண் துணை இயக்குனர் ஒருவர் குடிபோதையில் போலீசாரை எட்டி உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை திருவான்மியூரில் நேற்றிரவு வழக்கம்போல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒரு கார் மிக வேகமாக சென்று கொண்டிருந்ததை அடுத்து அந்த காரை நிறுத்திய போலீசார் காரில் இருந்தவர்களை வெளியே வரச் சொன்னார்கள். அப்போது காரில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் இருந்தனர் என்பதும் இருவரும் முழு போதையில் இருந்ததும் தெரியவந்தது.

இதனை அடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முயன்றபோது காரில் இருந்த பெண் திடீரென ஆவேசமாக போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் போலீசாரை பிடித்து தள்ளியதும், போலீசாரை காலால் எட்டி உதைக்கவும் செய்தார். இந்த அனைத்து காட்சிகளும் போலீசாரின் சட்டையில் இருந்த கேமராவில் பதிவு செய்யப்பட்டது.

இதனை அடுத்து அவர்களுக்கு அபராதம் மட்டும் விதித்து போலீசார் அவரை அனுப்பிவைத்தனர் இந்த நிலையில் இன்று காலை போலீசாரை தாக்கிய பெண் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்தனர். தனது தாயாரிடம் காவல் நிலையத்திற்கு வந்து இருந்த அந்த பெண்ணின் பெயர் பெயர் காமினி என்றும் சினிமா உதவி இயக்குனர் என்றும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் நேற்றிரவு காரில் அவருடன் வந்தவர் சாப்ட்வேர் இன்ஜினியர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது .

இந்த நிலையில் ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் பெண் துணை இயக்குனர் காமினியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.