ரஜினி மகளுக்கு மறுப்பு தெரிவித்த இயக்குனர் மணிரத்னம்: காரணம் இதுதான்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வீட்டில் சும்மா இருக்கும் திரையுலகினர் பலர் வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை தங்களுடைய சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் எந்த சமூக வலைதளத்திலும் இல்லாத, ரசிகர்களிடம் இருந்து விலகியே இருக்கும் மணிரத்னம் இந்த கொரோனா விடுமுறையில் தன்னுடைய மனைவி சுஹாசினியின் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

இந்த உரையாடலில் ஒரு ரசிகர், ‘நீங்கள் ஏன் ஒரு படத்தில் நடிக்கவில்லை? உங்களை யாராவது நடிக்க அழைத்தார்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த மணிரத்னம், ‘ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தான் இயக்கும் படம் ஒன்றில் என்னை நடிக்க அழைத்தார் என்றும், ஆனால் நான் தான் மறுத்துவிட்டேன்’ என்றும் கூறியுள்ளார். ஏனெனில் அந்த படத்தில் நான் சுமாராக நடித்துவிட்டு அதன்பின் நான் இயக்கும் படங்களில் நடிகர்களிடம் வேலை வாங்கும்போது, ‘நீ நடிச்சதை தான் நான் பார்த்தேனே’ என்று சொல்லிவிடுவார்கள்’ என்ற பயம்தான் என்று கூறியுள்ளார். மணிரத்னம் அவர்களின் இந்த நகைச்சுவையான பதில் ரசிகர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.