கொரோனா தடுப்பூசிகளின் தற்போதைய நிலவரம் என்ன??? எப்போது சந்தைக்கு வரும்???

  • IndiaGlitz, [Saturday,June 13 2020]

 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் உலக மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி மருந்தை அதிகம் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர். தற்போது வரை 120 க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி ஆய்வுகள் நடைபெற்று வருவதாக உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்து இருக்கிறது. இதில் 30 ஆய்வுகள் மிகவும் முக்கியமானவை என்றும் அதில் 10 க்கும் மேற்பட்ட மருந்துகள் மனிதர்களின் மீது சோதனைச் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

விஞ்ஞானிகளின் பார்வையில் உலக முழுவதும் 5 தடுப்பூசி மருந்துகள் அதிக கவனத்தைப் பெற்று இருக்கிறது. அதில் ஒன்று அமெரிக்காவில் மாடர்னா நிறுவனத்தால் மனிதர்களின்மீது சோதனைச் செய்யப்பட்ட தடுப்பு மருந்து. முதன் முதலில் கடந்த மார்ச் மாதத்தில் 45 தன்னார்வலர்களைக் கொண்டு மனிதர்களின் மீது சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மருந்து கொரோனா மரபணுவைக் கொண்டு ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கி, உயர்தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்து இருந்தது.

அடுத்து ஐரோப்பாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் ஆய்வு செய்யப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மருந்து. இது ஆஸ்திரேலியாவின் சிகப்பினக் குரங்குகளுக்கு முதன்முதலில் கொடுக்கப்பட்டு வெற்றிக் கண்டதாக செய்திகளும் வெளியானது. இந்தக் குரங்குகள் மனிதர்களை போன்ற நோய் எதிர்ப்பு மண்டலங்களை கொண்டிருக்கிறது என்ற தகவலும் வெளியாகி இருந்தது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 1000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களைத் தேர்ந்தெடுத்து தற்போது மனிதர்களின் மீது பரிசோதிக்கப் பட்டு வருகிறது.

இதைத்தவிர, Sanofi நிறுவனம் ஆய்வு செய்துவரும் கொரோனா தடுப்பு மருந்து தற்போது அதிகக் கவனத்தைப் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தடுப்பு மருந்து கொரோனாவின் புரதத்தைத் தடுத்து, அழிக்கும் ஆற்றல் கொண்டது எனவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு புரதமும் மனித உடலுக்குள் சில வகையான ஆன்டிஜென்களை உற்பத்தி செய்யும். அதை வைத்துக்கொண்டே மனித உடல் முழுவதும் பரவ முடியும். அப்படி கொரோனா வைரஸ் வெளியிடும் S புரதத்தின் ஆன்டிஜென்களை அழித்துத் தாக்கும் வகையில் இந்த நிறுவனம் மருந்து தயாரித்து உள்ளதாக விளக்கம் தரப்பட்டுள்ளது. கொரோனாவின் மரபணு பொருளை தாக்கி அழிப்பதால் மனித செல்லுக்குள் இது அதிக அளவில் பரவிவிடாமல் செய்யும் எனவும் நம்பப்படுகிறது. இந்த மருந்து 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஜெர்மனியில் Pfizer நிறுவனம் தயாரித்து வரும் கொரோனா தடுப்பு மருந்து மனிதர்களின்மீது நடத்தப்பட்ட சோதனையில் முதற்கட்ட வெற்றி பெற்று இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவும் அடுத்தத்தடுத்த சோதனைகளுக்கு தயாராகி வருகிறது. இதைத்தவிர சீனா இந்த மாதம் கொரோனாவிற்கு பலனளிக்கும் வகையில் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. Ad5-NCov எனப்படும் இந்த மருந்து கொரோனா மரபணுக் கொண்டு தயாரிக்கப் பட்டது. கொரோனா விற்கு எதிராக நோய் எதிர்ப்பு மண்டலங்களை வலுப்படுத்தும் வகையில் தயாரிக்கப் பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. விலங்குகளின் மீதான சோதனை முற்று பெற்று தற்போது மனிதர்களின் மீதான சோதனைக்கு தயாராகி வருகிறது.

அமெரிக்காவின்மாடர்னா நிறுவனத்தை விடவும் சீனாவின் தடுப்பு மருந்து முதலில் சந்தைக்கு வந்துவிடும் என அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பு மருந்து வருகிற செப்டம்பரில் சந்தைக்கு வரும் என நோய்த்தொற்று கட்டுப்பாட்டு மையத்தின் தலைமை இயக்குநர் தெரிவித்து இருந்தார். இதனால் அமெரிக்கா மற்றும் சீனாவிடையே கடுமையான போட்டி நிலவுவதாகவும் உலக நாடுகளில் கருத்து வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி அடுத்தடுத்த சோதனைகளை முடித்துக் கொண்டு உலகச் சுகாதார நிறுவனத்தின் உரிமையை பெற்று 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தான் சந்தைக்கு வரும் என கூறி வருகின்றனர்.