என்னது… முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ. 1 லட்சம் அபராதமா??? அதிரடி காட்டும் மாநிலம்!!!

 

ஜார்கண்ட் மாநில சட்ட சபையில் நேற்று புதிதாக ஒரு அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அதாவது, ஜார்கண்ட் தொற்றுநோய் அவசரச் சட்டம் 2020 என்ற பெயரில் நேற்றுக் கொண்டு வரப்பட்ட புது சட்ட வரைவுக்கு அம்மாநிலத்தின் அனைத்து சட்டசபை உறுப்பினர்களும் ஒப்புதல் வழங்கியுள்ளனர். புதிதாகக் கொண்டு வரப்படுள்ள சட்டத்தின்படி ஜார்கண்ட் மாநிலத்தில் யாராவது முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்படும். மேலும் ஊரடங்கு விதிமுறைகளை மதிக்காமல் வெளியே சுற்றிக் கொண்டு இருந்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்தியச் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் அம்மாநிலத்தில் சுகாதாரக் கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பதாகவும் மக்கள் சிகிச்சைக்காக படுக்கை இல்லாமல் தவிப்பதாகவும் பல்வேறு செய்திகள் வெளியாகின. எனவே அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமைச்சரவை உறுப்பினர்களுடன் சேர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா விஷயத்தில் மக்களின் ஒத்துழைப்பு முழுமையாகத் தேவைப்படும் எனத் தெரிவிக்கப் பட்டதை அடுத்து அமைச்சரவையில் புதிய சட்ட வரைவை கொண்டு வருவதற்கான முடிவு எட்டப்பட்டது.

அதன்படி நேற்று அம்மாநில சட்டசபையில் தொற்றுநோய் அவசரச் சட்டம் 2020 என்ற பெயரில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி கொரோனா பரவல் நேரத்தில் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்தால் ரூ. 1 லட்சம் அபராதமாக வசூலிக்கப்படும். ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே சுற்றினால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. இதுவரை அம்மாநிலத்தில் 6,456 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. உயிரிழப்பு 64 ஆக பதிவாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.