ஒரு ஐபோனுக்காக கைக் குழந்தையை விற்ற பலே தம்பதி? வசமாக சிக்கிய சம்பவம்

  • IndiaGlitz, [Saturday,July 29 2023]

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பகுதியில் வசித்துவரும் தம்பதி இருவர் இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிட்டு வரும் நிலையில் அவர்கள் ஐபோனை வாங்குவதற்காக தங்களது 8 மாத ஆண் குழந்தையை விற்றுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

24 பர்கானாஸ் மாவட்டத்தை அடுத்த பராக்பூர் பகுதியில் வசித்துவரும் தம்பதிகள் ஜெய்தேவ் கோஷ் – சதி. இவர்களுக்கு ஏற்கனவே 7 வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் அந்தக் குழந்தையை விட்டுவிட்டு அடிக்கடி ரீல்ஸ் வெளியிடுவதற்காக தம்பதிகள் இருவரும் சுற்றுலா சென்றுவருவதும் உற்சாகமாக குழந்தை இன்றி வெளியே சென்றுவருவதையும் பார்த்த அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சதியிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிட்டு வரும் நிலையில் தரமான வீடியோவை வெளியிடுவதற்காக ஐபோன் ஒன்றை வாங்க நினைத்ததாகவும் அதற்குப் பணமில்லாமல் குழந்தையை பிரியங்கா கோஷ் என்பவருக்கு விற்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தையை விற்ற பணத்தில் இருந்து புதிய ஐபோன் 14 செல்போனை ரூ.70 ஆயிரத்திற்கு வாங்கியிருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த போலீஸார் சதி மற்றும் பிரியங்கா கோஷை கைது செய்துள்ளனர். ஆனால் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட கணவன் ஜெய்தேஷ் தப்பிச் சென்றுள்ளார். மேலும் குழந்தையைப் பற்றி பிரியங்கா கோஷ் எதுவும் கூறாததால் அந்த குழந்தை எவ்வளவு ரூபாய்க்கு விற்கப்பட்டது? இப்போது எங்கே இருக்கிறது என்பது போன்ற தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

இதையடுத்து குழந்தையையும் அதை விற்பதற்கு ஏற்பாடு செய்த ஜெய்தேஷ் கோஷையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஒரு ஐபோன் வாங்குவதற்காக பெற்ற ஆண் குழந்தையை விற்ற தம்பதிகள் குறித்து பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கும் நிலையில் அந்தத் தம்பதிகள் ஏற்கனவே தங்களுடைய 7 வயது சிறுமியை விற்க முயன்றதாக அந்த ஊர் தாசில்தார் தெரிவித்து இருப்பது மேலும் அதிர்ச்சி அடைய வைக்கிறது.