தடுப்பூசி செலுத்தாவிட்டால் வேலை காலி… பீதியை கிளப்பும் பிரபல நிறுவனம்!

  • IndiaGlitz, [Wednesday,December 15 2021]

உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான கூகுள் மற்றும் அதன் தலைமை நிறுவனம் ஆல்ஃபாபெட் நிறுவனத்தில் வேலைப்புரியும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். ஒருவேளை செலுத்தாமல் இருக்கும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று அந்நிறுவனம் சார்பில் அறிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த 2019 டிசம்பர் மாதத்தில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் தற்போது பல்வேறு உருமாற்றங்களை அடைந்து டெல்டா, ஒமைக்ரான் வடிவில் மேலும் தீவிரம் பெற்றிருக்கிறது. இந்நிலையில் கொரோனாவிற்கு தீர்வாக தடுப்பூசி மட்டுமே நம்பப்படும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

மேலும் சில நாடுகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்கள் பொது இடங்களில் நடமாட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இன்னும் சில நிறுவனங்கள், கல்லூரிகள் போன்றவை தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதித்து வருகிறது. இந்நிலையில் கூகுள் மற்றும் ஆல்ஃபாபெட் நிறுவனம் இரண்டும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்து வரும் ஜனவரி 13 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.