நயன்தாராவை புண்படுத்தும் நோக்கம் இல்லை. விவேக் விளக்கம்

  • IndiaGlitz, [Thursday,October 27 2016]

கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் நடிப்பில் கோகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காஷ்மோரா' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட் சமீபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட நடிகர் விவேக், நயன்தாரா புரமோஷன்களில் கலந்து கொள்ளாதது குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பேசியதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் இதுகுறித்து விவேக் தனது விளக்கத்தை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“நான் காஷ்மோரா' பட நிகழ்ச்சியில் கதாநாயகிகள் பற்றி சில கருத்துக்களை சொன்னேன். இப்போதெல்லாம் கதாநாயகிகள் படவிழாக்களுக்கு வருவது இல்லை என்றும், கேட்டால் நாங்கள் அந்த விழாவுக்கு வருவது சென்டிமென்டாக சரியாக இருக்காது. தயாரிப்பாளர்கள் நலன் கருதியே பட விழாக்களுக்கு வருவது இல்லை என்கிறார்கள் என்றும் பேசினேன்.

அப்படி நினைக்காமல் கதாநாயகிகள் வந்து கலந்து கொண்டால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் பலமாக இருக்கும் என்று நகைச்சுவையாக சொன்னேன். நயன்தாராவை புண்படுத்தும் நோக்கம் இல்லை. நான் உண்மையிலேயே நயன்தாராவின் ரசிகன். ஐயா' படத்தில் இருந்து அவருடைய நடிப்பை ரசித்துக்கொண்டு இருக்கிறேன். நயன்தாராவின் கஷ்டகாலங்களில் அவருக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்துக்கள் பதிவு செய்து இருக்கிறேன்.”

இவ்வாறு விவேக் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.