அனிருத்துடன் இணைந்து இசையமைக்கும் இரட்டை இசையமைப்பாளர்கள் 

  • IndiaGlitz, [Thursday,July 12 2018]

தமிழ்த்திரையுலகில் இரண்டு முன்னணி இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைப்பது என்பது புதிதல்ல. விஸ்வநாதன் - ராமமூர்த்தி பல ஆண்டுகளாக இணைந்து இசையமைத்தனர். அதேபோல் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இளையராஜா இணைந்து ஒருசில படங்களில் இசையமைத்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்த்திரையுகில் இசையமைப்பாளர்களாக இருக்கும் விவேக்-மெர்வின் என்ற இரட்டையர்கள் அனிருத்துடன் இணைந்து ஒரு படத்தில் இசையமைக்கவுள்ளனர். எனவே இந்த படத்தில் மூன்று இசையமைப்பாளர்கள் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தை ஹர்ஷ்ராம் என்பவர் இயக்கவுள்ளார். இவர் 'எதிர் நீச்சல்’, ‘காக்கிசட்டை’, ‘கொடி' உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமாரிடம் உதவியாளராக பணிபுரிந்தவர்.

ரீகல் ரீல்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் வாசுகி பாஸ்கர், பல்லவி சிங் இருவரும் ஆடைகளை வடிவமைக்கின்றனர். வருகிற அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

நயன்தாரா நடித்த 'டோரா', பிரபுதேவா நடித்த 'குலேபகாவலி', த்ரிஷா நடித்த 'மோகினி' ஆகிய படங்களுக்கு இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.