விஜய்சேதுபதிக்காக விஷால் எடுத்த அதிரடி நடவடிக்கை

  • IndiaGlitz, [Monday,October 08 2018]

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' ரிலீசின்போது இந்த படத்தின் தயாரிப்பாளருக்கும் விஷாலுக்கும் இடையே பைனான்ஸ் பிரச்சனை ஏற்பட்டதாகவும், பின்னர் விஜய்சேதுபதி தலையிட்டதால் அந்த பிரச்சனை சுமூகமாக முடிந்தது என்றும் செய்திகள் வெளிவந்தன. இந்த பிரச்சனை குறித்து விஜய்சேதுபதி பேசியபோது, 'இதற்கு யாரும் பொறுப்பல்ல என்றும், இது சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் பிரச்சனை' என்றும் பெருந்தன்மையாக கூறினார். அதேபோல் விஷாலும், தனக்கு வரவேண்டிய பணத்திற்காக விஜய்சேதுபதி பொறுப்பேற்க வேண்டாம் என்றும், அந்த பணத்தை தானே தயாரிப்பாளரிடம் பெற்று கொள்வதாகவும் கூறினார்.

இந்த நிலையில் '96' திரைப்படத்தை சென்னையில் உள்ள ஒரு முக்கிய திரையரங்கில் ஒருசிலர் செல்போனில் படம் பிடிப்பதாக தகவல் வந்தது. இதுகுறித்த தகவல் அறிந்ததவுடன் உடனடியாக களத்தில் இறங்கிய தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால், இதுகுறித்து காவல்துறையினர்களிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் '96' திரைப்படத்தை செல்போனில் படம்பிடித்த விக்னேஷ், வசந்த் என்ற இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

தயாரிப்பாளர் சங்கத்தின் குறிப்பாக விஷாலின் அதிரடியால் இந்த குற்றம் தடுக்கப்பட்டதற்கு '96' படக்குழுவினர் விஷாலுக்கு நன்றி தெரிவித்தனர்.