விஷாலின் அடுத்த அதிரடி. தமிழகம் முழுவதும் திருட்டு டிவிடி கும்பல் கைது

  • IndiaGlitz, [Monday,July 04 2016]

நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் பதவியை ஏற்றதில் இருந்தே திருட்டு டிவிடிக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். சமீபத்தில்கூட கும்பகோணத்தில் தனியார் கேபிள் டிவி ஒன்று உதயநிதியின் 'மனிதன்' படத்தை ஒளிபரப்பியதற்கு நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட விஷால் காரணமாக இருந்தார்.
இந்நிலையில் இதேபோல் தமிழகம் முழுவதும் திருட்டு டிவிடியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஷால் கொடுத்த புகாரின் அடிப்படையில் நேற்று திருட்டு வீடியோ பைரசி தடுப்பு சோதனை தமிழ்நாடு முழுவதும் ATGB Sunil Kumar IPS அவர்களின் தலைமையில் நடைபெற்றது. குறிப்பாக Sunil Kumar IPS அவர்களின் உத்திரவின் பேரில் கோயம்புத்தூர் பகுதியின் S.P கோவையின் அனைத்து பகுதிகளுக்கும் ஆய்வுக்கு சென்றுள்ளார். நாள் முழுவதும் நடத்திய வேட்டையில் திருட்டு டி.வி.டி மற்றும் வி.சி.டி விற்ற 25 கடைகளின் உரிமையாளர்களை அவர் கைது செய்துள்ளார்.
இதேபோல் மதுரையில் திருட்டு டி.வி.டி மற்றும் வி.சி.டி விற்ற 16 கடையின் உரிமையாளர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கை ATGB Sunil Kumar IPS உத்திரவின் பேரில் எஸ்.பி. ஜெயலக்ஷ்மி IPS அவர்களின் நேரடி பார்வையில் டி.எஸ்.பி நீதிராஜன் மற்றும் ஆய்வாளர்கள் திருமதி. ராஜேஷ்வரி மற்றும் பாலமுருகன் அவர்களின் கண்காணிப்பில் நடைபெற்றது.