2 அரசியல் கட்சி தலைவர்களுக்கு மட்டும் வாழ்த்து சொன்ன விஜய்.. 2026ல் கூட்டணி உறுதியா?

  • IndiaGlitz, [Friday,June 07 2024]

நடைபெற்ற முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மொத்தமாக 40க்கு 40 என்ற வெற்றியை பெற்றுள்ள நிலையில் தமிழகத்தின் இரண்டு அரசியல் கட்சி தலைவர்களுக்கு மட்டும் தளபதி விஜய் வாழ்த்து கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஆந்திர மாநிலத்தில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகிய இருவருக்கும் வாழ்த்து கூறிய தளபதி விஜய் தற்போது நாம் தமிழர் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு கட்சிகளும் நடைபெற்ற முடிந்த தேர்தலில் அதிக சதவீத வாக்குகளை பெற்று மாநில கட்சி என்ற அந்தஸ்து பெற்றுள்ள நிலையில் இந்த கட்சியின் தலைவர்களுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்திகள் கூறியிருப்பதாவது:

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

ஏற்கனவே 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியுடன் தளபதி விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று கூறப்படும் நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு அவர் வாழ்த்து கூறியிருப்பது கூட்டணியை உறுதி செய்வதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.