விஜய் டிவி சீரியல் நடிகர் தற்கொலை முயற்சியா? வைரலாகும் வீடியோ

  • IndiaGlitz, [Thursday,July 21 2022]

விஜய் டிவி சீரியல்களில் நடித்த நடிகர் ஒருவர் தற்கொலை முயற்சி செய்து கொண்டதாக வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த வீடியோ குறித்து அவர் மற்றொரு வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ’காற்றுக்கென்ன வேலி’ என்ற சீரியல் தற்போது இளைஞர்களின் விருப்பத்துக்குரிய சீரியலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியலில் நாயகி வெண்ணிலா என்ற கேரக்டரின் கல்லூரி நண்பனாக ராகவேந்தர் என்பவர் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ‘கனாக்காணும் காலங்கள்’ தொடரில் புலி என்ற கேரக்டரில் நடித்து இருந்தார் என்பதும் இவரது நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இவர் தற்போது விஜய் டிவியின் எந்த சீரியல்களிலும் இல்லை என்றும் அதனால் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் நடிகர் ராகவேந்தர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தார். அதில் ஒருதலை காதல் தோல்வி என்றும், அதனால் ஏற்பட்ட நிலை என்றும் கூறி தனக்கு டிரிப் ஏற்றி கொண்டிருக்கும் வீடியோ காட்சியையும் வெளியிட்டிருந்தார்.

இதனை அடுத்து ராகவேந்தர் தற்கொலை முயற்சி செய்து கொண்டதாக சமூக ஊடகங்களும் ஒரு சில ஊடகங்களும் செய்தி வெளியானதை அடுத்து அவர் இது குறித்து விளக்கமளித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ’நான் இதற்கு முன் ஒருதலை காதல் தோல்வி என்று பதிவு செய்த வீடியோ நகைச்சுவைக்காக வெளியானது என்றும் அந்த வீடியோ மருத்துவமனையில் எடுக்கப்பட்டது அல்ல என்றும், வீட்டில் தான் எடுக்கப்பட்டது என்றும், ஆனால் அதை பார்த்து எல்லோரும் நான் தற்கொலை முயற்சி செய்து விட்டதாக செய்திகளை பரப்பினார்கள் என்றும் இதை பார்த்து நானும் என் குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்து விட்டோம்’ என்று கூறியுள்ளார்.

எனக்கு மன அழுத்தம் இருப்பது உண்மைதான் என்றும் ஆனால் அதே நேரத்தில் தற்கொலை முயற்சி செய்யும் அளவுக்கு என்னுடைய நிலைமை இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.