விஜய் ஒரு நிஜ கதாநாயகன்.. இரவு பாடசாலைக்கு பாராட்டு தெரிவித்த பிரபல தயாரிப்பாளர்..!

  • IndiaGlitz, [Thursday,July 13 2023]

தளபதி விஜய்யின் மக்கள் இயக்கம் நாளை மறுநாள் அதாவது ஜூலை 15ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் இரவு பாடசாலை அமைக்க இருக்கிறது. இதன் மூலம் ஏழை எளிய மாணவர்கள் அதாவது பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள் கல்வி பயில ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் இந்த முயற்சிக்கு அனைத்து தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் ’மாநாடு’ உட்பட பல வெற்றி படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி விஜய்யின் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து அவர் ஒரு நிஜ கதாநாயகனாக மாறி உள்ளார் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

எத்தனையோ குழந்தைகள் இன்னமும் இரவு நேரம் படிக்க வசதி இல்லாமல் தவிக்கிறார்கள். மதிப்பெண்களால் வெற்றி பெற்று நாளிதழ்களில் மின்னொளியில் படித்தேன். மண்ணெண்ணெய் விளக்கில் படித்தேன் என மாணாக்கர்கள் சொல்லும்போதுதான் அவர்களின் வறுமை புரிய வருகிறது.

அப்படியிருக்க, தமிழ் சினிமாவில் கோலோச்சும் நாயகன் விஜய் அவர்கள் இரவு பாடசாலை திட்டத்தை செயல்படுத்த முன்வந்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. தான் நிஜ கதாநாயகன் என தன் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டிருப்பது கல்விச் செல்வம் தழைக்க மிக மிக அவசியமானது. தொடர்க. வாழ்த்துகள்.