விஜய் சொன்ன குட்டிக்கதையில் அந்த சின்னப்பையன் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,October 28 2024]

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நேற்று நடந்த போது, அதில் பேசிய விஜய், கெட்ட பையன் சார் அந்த சின்ன பையன் என்று சிறுவயதிலேயே மன்னராக முடிசூடி போருக்கு புறப்பட்ட பாண்டிய மன்னனின் ஒரு கதையை கூறினார்.

தந்தை இறந்ததால் சிறு வயதிலேயே ஆட்சி பொறுப்பை ஏற்ற அந்த சின்ன பையன், போருக்கு கிளம்பிய போது, போர் என்பது சாதாரண விஷயம் கிடையாது. போர் என்றால் படையை நடத்த வேண்டும், எதிரி படைகளை சமாளிக்க வேண்டும்; அதைவிட முக்கியமாக வெற்றி பெற வேண்டும். உனக்கு யாரும் துணை இல்லை; நீ எப்படி அந்த போரை நடத்துவாய்? என்று அவருடைய படையில் இருந்த பெரியவர்கள் கேட்டார்கள்.

அப்போது அந்த சின்ன பையன் என்ன செய்தான் என்று சங்க இலக்கியத்தில் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்; படித்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று சஸ்பென்ஸ் வைத்து கெட்ட பையன் சார் அந்த சின்ன பையன் என்று விஜய் கூறியிருந்தார்.

இதனை அடுத்து, விஜய் சொன்ன அந்த பாண்டிய மன்னன் யாராக இருக்கும்? என்று சமூக வலைதளங்களில் பலரும் தேடிய நிலையில், தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் தான் என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்தான் சிறுவயதிலேயே தந்தையின் இறப்புக்கு பின் முடி சூட்டியதாகவும், சேர சோழ மற்றும் கொங்கு நாட்டு குறுமன்னர்கள் சிறுவனிடம் இருந்து எளிதாக பாண்டிய நாட்டை வசப்படுத்தலாம் என்று படையெடுத்து வந்த போது, அவர்களை துணிச்சலுடன் எதிர்த்து போரிட்டு தோற்கடித்தார் என்றும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை ஆகிய இரண்டு நூல்களில் இவருடைய பெருமைகள் விளக்கப்பட்டு இருக்கின்றன என்றும், அந்த மன்னனே ஒரு செய்யுள் பாடிய நிலையில், அதுவும் புறநானூறில் இருக்கிறது என்றும் தெரியவந்துள்ளது. தற்போது இந்த தகவல் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.