விஜய், அஜித், சூர்யா பட தயாரிப்பாளர் காலமானார்.. சூர்யா நேரில் அஞ்சலி..!

  • IndiaGlitz, [Wednesday,September 04 2024]

விஜய், அஜித், விக்ரம், சூர்யா உள்பட பல பிரபலங்களின் படங்களை தயாரித்தவர் மற்றும் பழம்பெரும் நடிகர் மோகன் நடராஜன் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து திரையுலகினர் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மோகன் நதியா நடித்த 'பூக்களை பறிக்காதீர்கள்' என்ற திரைப்படம் மூலம், மோகன் நடராஜன் தயாரிப்பாளராக அறிமுகமாகி அதன்பின்னர் விஜய் நடித்த ’கண்ணுக்குள் நிலவு’ அஜித் நடித்த ’ஆழ்வார்’ விக்ரம் நடித்த ’தெய்வத்திருமகள்’ சூர்யா நடித்த ’வேல்’ உட்பட பல தமிழ் திரைப்படங்களை மோகன் நடராஜன் தயாரித்துள்ளார்.

மேலும் நம்ம அண்ணாச்சி, சக்கரைத்தேவன், கோட்டை வாசல், புதல்வன், பிள்ளைக்காக, பாட்டுப் பாடவா, அரண்மனை காவலன், பதவிப்பிரமாணம், மகாநதி, பட்டியல் உள்பட பல படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் கேரக்டர்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த மோகன் நடராஜன் சிகிச்சையின் பலன் இன்றி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமான செய்தி அறிந்தவுடன் நடிகர் சூர்யா நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

மேலும் பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய சமூகவலைதளங்களில் தயாரிப்பாளர் மோகன் நடராஜன் மறைவிற்கு இரங்கல் பதிவு செய்து வருகின்றனர்.