சென்னையில் பிடிபட்ட 3 கிலோ கஞ்சா: பழம்பெரும் பாடகரின் பேரன் கைது!

  • IndiaGlitz, [Tuesday,December 31 2019]

சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் கடந்த சில மாதங்களாக தங்கி இருப்பதாகவும், அந்த வீட்டில் அடிக்கடி சிலர் வந்து போவதாகவும், வீட்டிலிருந்து கஞ்சா புகை வெளியேறுவது போல் இருப்பதாகவும் அந்த பகுதியில் உள்ளவர்கள் மூலம் காவல் துறையினருக்கு ரகசிய புகார் வந்தது

இதனை அடுத்து அதிரடியாக அந்த வீட்டை சுற்றி வளைத்து சோதனை செய்த காவல்துறையினர் அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். இதனை அடுத்து அந்த வீட்டில் தங்கியிருந்த 6 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான யஷ்வந்த் ராஜா என்பவர் மேடைப் பாடகர் என்றும் பழம்பெரும் பின்னணிப் பாடகர் ஏ.எம்.ராஜாவின் பேரன் என்பதும் தெரியவந்தது

கடந்த 50கள் மற்றும் 60களில் ஜெமினி கணேசன் உள்ளிட்ட பிரபல நடிகர்களின் திரைப்படங்களில் பிரபலமான பல பாடல்களை பாடியவர் ஏஎம் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பழம்பெரும் பாடகரின் பேரன் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது