வினு சக்கரவர்த்தி மறைவிற்கு நடிகர் சங்கம் இரங்கல் செய்தி

  • IndiaGlitz, [Friday,April 28 2017]

கோலிவுட் திரையுலகில் குணசித்திர, நகைச்சுவை, வில்லன் வேடங்களை ஏற்று 1003 படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் வினுசக்கரத்தி நேற்று உடல்நலக்கோளாறு காரணமாக காலமானார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் திரையுலகினர் சென்று இறுதி மரியாதை செலுத்தி வரும் நிலையில் நடிகர் சங்கம் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளது.

பிரபல நடிகர் வினுசக்ரவர்த்தி சென்னையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து, பிரபல கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகல் அவர்களிடம் கதாசிரியர் மற்றும் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' படம் மூலம் திரைக்கதை எழுதி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்பு 'வண்டிச்சக்கரம்', கோயில் புறா', இமைகள், பொண்ணுக்கேத்த புருஷன் ஆகிய படங்களுக்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி துணை இயக்குனராகவும் பணிபுரிந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், படுகா, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் 1003 படங்களில் நடித்துள்ளார். அவரது கடைசி படம் சீரடி சாய்பாபா.

தனது இயல்பான நடிப்பால் மக்கள் அனைவரையும் கவர்ந்த இவர் காலமானதை அறிந்து அதிர்ச்சியுற்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடையவும், அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்து கொள்கிறது. இவ்வாறு நடிகர் சங்கத்தின் இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.