close
Choose your channels

வனிதா விஜயகுமார் பிதா திரைப்பட அறிவிப்பு விழா!! திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு..!

Monday, June 10, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஸ்ரீநிக் புரடொக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் பால சுப்பிரமணி & சதீஷ் குமார் தயாரிப்பில், இயக்குனர் கார்த்திக் குமார் இயக்கத்தில், மதி நடிகராக அறிமுகமாகும் திரைப்படம் பிதா. மாறுபட்ட களத்தில் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில் நடிகை லக்‌ஷ்மி ‌ராமகிருஷ்ணன் பேசியதாவது, ‘மொத்தக்குழுவிற்கும் என் வாழ்த்துக்கள். சினிமா ஒரு பவர்புல் மீடியா. ஒவ்வொரு வாய்ப்பும் மிக முக்கியமானது. அது முடிந்த பிறகு தான் இன்னும் நன்றாக செய்திருக்கலாம் எனத் தோன்றும். எனவே கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தக்குழுவிடம் நிறைய உழைப்பு தெரிகிறது. மதி நடிகராக அறிமுகமாகும் படம். டிரெய்லர் நன்றாக உள்ளது, கார்த்திக் குமாருக்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, ‘பிதா அன்மாஸ்கிங் மிக சந்தோஷமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் இன்னொரு புது ஹீரோ, புது தயாரிப்பாளர் வருவதை நாம் வரவேற்க வேண்டும். இன்றைக்குத் தமிழ் சினிமாவில் ஹீரோ சம்பளம் மிகப் பெரிதாகி விட்டது. படத்தின் பட்ஜெட் எங்கோ போய்விட்ட நிலையில், இந்த மாதிரி புது அறிமுகங்கள் வர வேண்டும். மதியழகன் நல்ல கதைகள் தேர்ந்தெடுத்து, நல்ல படங்கள் செய்ய வாழ்த்துக்கள். கார்த்திக் குமாருக்கு என் வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள். எல்லோரையும் மகிழ்விக்கும் படமாகப் பிதா வர வாழ்த்துக்கள்

இயக்குனர் சரவணன் சுப்பையா பேசியதாவது, ‘இப்படத்தின் தயாரிப்பாளர் நிறைய படம் செய்துள்ளார். பல படங்கள் செய்யும் நிலையில் இந்த படத்தைத் தயாரிக்க காரணம் இந்த கதை தந்த இம்பாக்ட் தான். இந்த கதையை உருவாக்கிய கார்த்திக் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர் சரண் பேசியதாவது, ‘பிதா அன்மாஸ்கிங். இந்த அன்மாஸ்கிங் என்பது இனிமேல் தமிழ் சினிமாவில் டிரெண்டாக இருக்கும். ஒரு தயாரிப்பாளர் ஹீரோவாக களமிறங்குகிறார். கார்த்திக் குமார் இயக்குகிறார் அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவே நான் வந்துள்ளேன். படத்தின் காட்சிகள் பார்த்தேன் வனிதாவையே கடுப்போடுட்டு விட்டார்கள் என்றால் இவர்கள் ரசிகர்களையும் கட்டிப் போட்டு விடுவார்கள். இசை ஒளிப்பதிவு எல்லாம் நன்றாக உள்ளது. பெரிய நம்பிக்கை தருகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

KR வெங்கடேஷ் பேசியதாவது, ‘அனைத்து பெரியவர்களுக்கும் வாழ்த்துக்கள். பிதா என்னும் பெயரில் இன்னொரு படம் வருவதாகச் சொன்னார்கள். ஒரு தொகுதியில் ஜெயிக்க கூடிய கேண்டிடேட் பேரில் 10 கேண்டிடேட் போடுவார்கள் அதையெல்லாம் கண்டுகொள்ள கூடாது. ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள மதி மிகப்பெரிய அளவில் சாதிக்க வாழ்த்துக்கள். இப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

திருமதி சுந்தரவள்ளி பேசியதாவது, ‘தமிழ் நாட்டில் அதிக படம் பார்த்த ஆட்களில் ஒரு ஆள் நான். தமிழ் சினிமா இப்போது இளைஞர்கள் கையில் சென்றுள்ளது. மறுக்கப்பட்ட கதைகளை, தவிர்க்கப்பட்ட கதைகளை வெளிப்படுத்தி இந்திய அளவில் எடுத்துச் செல்லும் சினிமாக்கள் வருகிறது. இப்படமும் இளைஞர்களால் உருவாகியுள்ளது. எனக்கு டிரெய்லர் பிடித்திருந்தது. காட்சிகள் இசை எல்லாம் நன்றாக உள்ளது. இப்படம் நல்ல கருத்தைச் சொல்லும் என நம்புகிறேன். கதையின் நாயகன் மதியழகன், தயாரிப்பாளர்களுக்கு என் வாழ்த்துக்கள். படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். நன்றி.

நடிகர் குணா பேசியதாவது, ‘மண்டியிட்டு வாழ்வதை விட சண்டையிட்டு சாவதே மேல் என்ன சொன்னான் என் அண்ணன் வேலு பிரபாகரன். நான் இந்த விழாவிற்கு வந்ததற்கான காரணம் அண்ணன் வேலு பிரபாகரன் தான். இந்த படைப்பைத் தம்பி கார்த்திக் நன்றாக எடுத்து இருப்பார் என்று நம்புகிறேன். தயாரிப்பாளர் மதியழகன் பல திரைப்படங்களை எடுத்துள்ளார், அவர் சமீபத்தில் எடுத்த சாமானியன் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் இந்த வீடு பேங்கினுடையது உங்களுடையது அல்ல என, மக்களிடம் கொள்ளையடிக்கும் பேங்க் பற்றி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு அற்புதமான திரைப்படத்தை எடுத்திருந்தார். அந்த கதையை எழுதியவர் தான் கார்த்திக். அவரை வைத்து இப்போது மதியழகன் நடித்து எடுத்திருக்கும் படம் கண்டிப்பாக ஒரு நல்ல படைப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த திரைப்படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

நடிகர் மணிகண்டன் பேசியதாவது, ‘பிதா டிரெய்லர் மிரட்டுகிறது. முழுக்க இளைஞர்களாக இருக்கிறார்கள். நன்றாகச் செய்துள்ளார்கள். இந்தப்படத்தின் எதிர்காலம் பத்திரிக்கையாளர்கள் கையில் தான் உள்ளது. இன்று பல படங்கள் வெளியிடப்பட முடியாமல் உள்ளது. கஷ்டமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலை மாற வேண்டும். பிதா ஜெயிக்க எனது வாழ்த்துக்கள்.

பாபி மாஸ்டர் பேசியதாவது, ‘மதி சாருக்கும் எனக்கும் நல்ல ரிலேஷன்ஷிப் உள்ளது. அவர் எடுத்த எல்லா படத்திலும் நான் இருப்பேன். அவரது ஆர்வத்திற்கும் உழைப்பிற்கும் இப்படம் பெரிய வெற்றி பெறும். என்னை எப்போதும் முழுமையாக நம்புபவர் அவர். மதி சாரின் எல்லா படங்களிலும் என் பங்கு இருக்கும். ஒரு நல்ல ஹீரோ சினிமாவுக்கு அறிமுகமாகிறார் அவர் பெரிய உயரம் செல்ல வேண்டும். வாழ்த்துக்கள்.

திருமுருகன் காந்தி பேசியதாவது, ‘திரைத்துறை சார்ந்து பெரிய அறிமுகம் இல்லை. மண் சார்ந்து ஒரு படமெடுத்துள்ளார்கள் என்று சொன்னார்கள். டிரெய்லரில் பிரபாகரன் அய்யா படம் பார்த்த போது ஒரு நம்பிக்கை வந்தது. சமூக அக்கறையோடு இயங்கக் கூடிய நாயகனை மதி முன்னிறுத்துகிறார். முதல் படம் போல் தோன்றவில்லை. வாழ்த்துக்கள். இயக்குநர் கார்த்திக்குமார் நேர்த்தியாகப் படத்தை எடுத்துள்ளது போல் இருக்கிறது. நல்ல படைப்பாக இருக்குமென்று நம்புகிறேன். ஈழத்தினை பற்றிப் பேசும்போது மனதில் பெரும் வலி இருக்கிறது. இங்கு ஈழத்திற்காக போராடிய அண்ணன் பிரபாகரன் பெயரை கூட சொல்ல முடியாத நிலை நிலவுகிறது. அதை பற்றி பேசவே பயப்படும் காலத்தில், ஒரு படைப்பை தர முயலும் இந்த குழுவிற்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

சூப்பர் குட் சுப்பிரமணி பேசியதாவது, ‘டிரெய்லர் பார்த்தேன். நன்றாக உள்ளது. திரை பிரபலங்கள் அனைவரும் பாராட்டியுள்ளார்கள். இந்த பாராட்டை மனதில் வைத்து நல்ல திரைக்கதையை அமைத்து படத்தை வெற்றி பெறச் செய்யுங்கள். படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.

நடிகை வனிதா விஜயகுமார் பேசியதாவது, ‘ எனது தண்டுபாளையம் திரைப்படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகியுள்ளது, அதைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் விழா நடக்கிறது. இங்கு பர்சனலாக ஒரு விஷயத்தை நான் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன், எல்லோருடைய வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் பல பர்சனல் பக்கங்கள் இருக்கும். அதில் நடக்கும் விஷயங்கள் நம்மை முடக்கிவிடும் ஆனாலும் அதைத் தாண்டி நல்ல விஷயங்களும் நடக்கும். எக்ஸாம் தோல்வி அடைந்தால் சூசைட், காதல் தோல்வி அடைந்தால் சூசைட் என்ற நிலை இப்போது இருக்கிறது ஆனால் அதைத் தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது வெற்றி இருக்கிறது உங்கள் வாழ்க்கையை தொடர்ந்து வாழுங்கள் வெற்றியை எதிர்பார்க்கத் தேவையில்லை அது உங்களை வந்தடையும். இப்படம் கதை எனக்குப் பிடித்திருந்தது, எனக்கு இதில் பிராஸ்தடிக் மேக்கப், அதைச் சாதாரணமாக நினைத்து விட்டேன், அதன் பிறகு தான் புரிந்தது மிக மகிழ்ச்சியாக ரசித்து இந்த வேலையை செய்தேன். இந்த படம் எடுக்கும்போதே படத்தின் தரம் தெரிந்தது. திட்டமிட்டு உழைத்தார்கள். கார்த்திக் மதியழகன் மிகக் கடுமையாக உழைத்து உள்ளார்கள். படத்தின் வெற்றி விழாவில் இன்னும் நிறைய பேசுகிறேன் எல்லோருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் நடிகர் V மதி பேசியதாவது, ‘இது வித்தியாசமான தருணம், நான் நடிகனாக அறிமுகமாகும் முதல் மேடை , இந்த மாதத்திலேயே தயாரிப்பாளராக நான்கைந்து படங்களுக்கு இந்த மேடைக்கு வந்திருக்கிறேன் இப்பொழுது நடிகனாக உங்கள் முன்னால் வந்திருக்கிறேன். உங்கள் முழு ஆதரவினை தர வேண்டுகிறேன், நீங்கள் எப்போதும் எனக்கு நல்ல ஆதரவைத் தந்து வந்திருக்கிறீர்கள் ஆனாலும் கடைசி படம் பெரிய அளவில் செல்லவில்லை, இருந்தும் ராமராஜன் சார் அவர்களை நடிக்க வைத்த பெருமை கிடைத்தது சந்தோஷம். இப்படத்தில் ஈழம், மேதகு பிரபாகரன் போன்ற விஷயங்களைப் பரபரப்புக்காக பயன்படுத்தவில்லை அவர்களை எந்த விதத்திலும் அவமதிக்கவில்லை மிகவும் உண்மையாக ஒரு படைப்பை உருவாக்கி உள்ளோம். இதுவரை இல்லாத வகையில் மிக வித்தியாசமான படைப்பாக இந்த படம் இருக்கும், உங்கள் அனைவரின் ஆதரவையும் தாருங்கள் நன்றி.

இயக்குநர் கார்த்திக் குமார் பேசியதாவது, ‘எனது தயாரிப்பாளர் பால சுப்ரமணியன் அவர்களுக்கும், சதீஷ் அவர்களுக்கும் முதல் நன்றி சாமானியன் திரைக்கதையை அவர்களிடம் சொன்னபோது, கேட்டவுடனே அந்தக் கதை மீது நம்பிக்கை வைத்து, உடனே அதைத் தயாரித்தார்கள். அதேபோல் இந்தக் கதையின் மீதும் நம்பிக்கை வைத்து, தயாரித்து இருக்கிறார்கள் மிக்க நன்றி. அவர்கள் தந்த வாய்ப்புதான் இந்த மேடையில் நான் நிற்கக் காரணம், நடிகராக இந்த படத்தில் மதியழகன் சார் அறிமுகமாகிறார். அவர் மனதளவில் மிக அழகானவர், அவர் எங்கேயும் பேச மாட்டார் இந்த மேடையில் தான் முதல் முறையாகப் பேசியுள்ளார். மிக அமைதியானவர் ஒரு சிறு தொழிலைப் பார்த்தாலே பலர் வேறு துறைக்கு சென்று விடுவார்கள் ஆனால் மதியழகன் சார் பத்து பன்னிரண்டு படங்களைத் தாண்டி திரைத்துறை தான் வேண்டும் என்று நிமிர்ந்து நிற்கிறார் தொடர்ந்து படங்கள் செய்கிறார் இப்படத்தில் முழு நடிகராக வருகிறார். அவரிடம் பயங்கரமான திறமை இருக்கிறது, அது இந்த திரைப்படத்தில் முழுமையாக வெளிப்படும், இந்தப் படத்திற்காக மதி சார் ரொம்பவும் மெனக்கெட்டுள்ளார். இதுவரை சொல்லாத புதிய விஷயத்தைச் சொல்ல முயற்சித்துள்ளோம் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நாஞ்சில் சம்பத் பேசியதாவது, ‘நண்பர் தம்பி கார்த்திக் குமாருக்கு என் வாழ்த்துக்கள். நான் வாழ்ந்த ஊரைச் சார்ந்தவன் தம்பி கார்த்திக். ஒரு அதிர்வை உண்டாக்கும் படைப்பைத் தம்பி செய்கிறான் என்பது மகிழ்ச்சி. இன்றைய காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட பல படங்கள் திரைக்கு வரவில்லை. பல படங்கள் சென்சார் பிரச்சனைகளில் சிக்கி முடங்கிக் கிடக்கிறது. நான் நடித்த ஒரு படத்தின் பெயர் சேகுவாரா. அதில் என் பெயர் அண்ணாதுரை அந்தப்பெயர் வரக்கூடாதென்கிறார்கள். சினிமா என்பது சதுப்புநிலம். அதை அணுகுவது கடினம். நான் சினிமாக்காரன் இல்லை நான் இருக்கும் இடத்தில் இருக்கும் அரசியலை விட இங்கு அதிக அரசியல் இருக்கிறது. அந்த களத்தில் தம்பி கார்த்திக் ஒரு நல்ல படைப்பைத் தர முயற்சிக்கிறார். அவர் முயற்சி கண்டிப்பாக வெற்றி அடையும். ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படைப்பாளியாக கார்த்திக் குமார் வருவார். 11 படங்களைத் தயாரித்த மதியழகன் இப்படத்தில் நடிகராக மாறியுள்ளார். இந்தக்கூட்டணி வெல்வதற்கு என் வாழ்த்துக்கள் நன்றி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.