கமல் செய்வது அரைவேக்காட்டுத்தனம்! பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Friday,February 08 2019]

வரும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைக்க ஒருசில கட்சிகளுடன் பேசிக்கொண்டிருப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பேட்டியளித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், நேற்று திடீரென 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்று அறிவித்தார். மேலும் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து எங்கள் கைகளை கறையாக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். தனித்து போட்டியிடும் கமலின் இந்த முடிவை அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தனித்து போட்டியிடும் கமல், நோட்டாவை விட அதிக வாக்குகளை வாங்கி காட்டட்டும் என அமைச்சர் ஜெயகுமார் ஒருபுறம் விமர்சனம் செய்துள்ள நிலையில் பிரபல குணசித்திர நடிகரும் முன்னாள் திமுக எம்.எல்.வுமான வாகை சந்திரசேகர் கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறியதாவது:

டுவிட்டர் கனவுகளில் மிதந்தபடி அரசியல் செய்யும் கமல்ஹாசன், திமுகவை விமர்சனம் செய்வது அரைவேக்காட்டுத்தனம். கமல் போடும் வேடம், ஒருபோதும் நிலைக்காது என வாகை சந்திரசேகர் கூறியுள்ளார். மேலும் கருணாநிதியிடம் தான் தமிழ் கற்றேன் என கூறும் கமல்ஹாசன், அவரது தலைமையில் தான் திமுக பேரியக்கமாக எதிர்நீச்சல் போட்டு நிலைத்திருக்கிறது என்பதை மறந்தது எப்படி? என்றும் வாகை சந்திரசேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.