பன்றிக்காய்ச்சல் ஒரு நோயே இல்லை.. கொரோனோவுக்கு 'யோகா' இருக்கிறது.. கலக்கும் யோகி ஆதித்யத்நாத்..!

  • IndiaGlitz, [Monday,March 02 2020]

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உலகையே உலுக்கிப் பல உயிர்களைக் காவு வாங்கிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்தியாவில் ஹெச்.1.என்.1.(H1N1) எனப்படும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு வெகுவாகப் பரவிவருகிறது.

ஜனவரியில், இந்தியாவில் பரவத்தொடங்கிய பன்றிக்காய்ச்சல், பிப்ரவரி 16 வரையிலான கணக்குப்படி இதுவரை 884 பேரை பாதித்துள்ளது. இடைப்பட்ட ஒன்றரை மாத காலத்தில், பன்றிக்காய்ச்சலால் 14 பேர் இறந்துள்ளதாக நம் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத், லக்னோவில் நடைபெற்ற ஒரு மருத்துவ முகாமில் பன்றிக்காய்ச்சல் குறித்துப் பேசியுள்ளார். அவர் பன்றிக்காய்ச்சல் தொற்று குறித்துப் பேசியபோது,''உத்தரப்பிரதேசத்தில் பன்றிக்காய்ச்சல் தொற்று தீவிரமாகப் பரவி வருவதைக் காண முடிகிறது. இந்தக் காய்ச்சல் எல்லாம் ஒரு நோயே அல்ல. வானிலை மாறும்போது, சிலருக்கு சளி பிடிக்கும். அது சிலருக்குக் காய்ச்சலாக மாறும். இது எதனால் ஏற்படுகிறது என்பதன் அடிப்படையில் அதை பன்றிக்காய்ச்சல் அல்லது பறவைக் காய்ச்சல் என்று அழைக்கிறோம்.எனவே, யாரும் பன்றிக்காய்ச்சலை நினைத்து பீதியடைய வேண்டாம். இதற்காக, சுகாதாரத்துறை ஒரு சிறந்த செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். என்று கூறினார்.

இதே போல் உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேசில் சர்வதேச யோகா திருவிழாவை தொடங்கி வைத்து அவர் இது தொடர்பாக பேசியது, இந்திய பாரம்பரியத்தை நாம் இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். யோகா மூலம் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம். உலகம் முழுவதும் உடல் மற்றும் மன நோய்க்கு எதிரான போர் நடக்கிறது. வழக்கமாக யோகா செய்தால் கொரோனா வைரஸ் போன்றவற்றை தடுக்கலாம். யோகா மூலம் நல்ல உடல் தகுதியுடன் இருந்தால் கொரோனா போன்ற நோய்க்கு அச்சப்பட தேவையில்லை.