லண்டனை சேர்ந்த ஒருவர் சென்னை சிறையில் உயிரிழப்பு… புதியவகை கொரோனா காரணமா???

  • IndiaGlitz, [Thursday,December 24 2020]

 

சென்னை- பூந்தமல்லி கிளை சிறைச் சாலையில் லண்டனை சேர்ந்த ஒருவர் (கைதி) திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்து உள்ளார். இவர் லண்டனில் பரவிவரும் புதிய வகை கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்தாரா என்ற அச்சம் மற்ற சிறை கைதிகளிடம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அச்சிறைச் சாலையில் உள்ள அனைத்துக் கைதிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் சிறை நிர்வாகம் கூறியுள்ளது.

தர்மபுரி பகுதியில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி சந்தேகத்திற்கு உரிய வகையில் சுற்றித்திரிந்த வெளிநாட்டு நபர் ஒருவரை போலீசார் ரோந்து பணியின்போது பார்த்து உள்ளனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தன்னுடைய பெயர் டேவிட் வில்லியம் எனக் கூறியுள்ளார். மேலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பல மாதங்களாகத் தமிழகத்தில் சுற்றி வருவதாகவும் தெரிவித்து உள்ளார். இதனால் அந்த நபரை போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்து உள்ளனர்.

இந்நிலையில் அடுத்தக்கட்ட விசாரணைக்காக இவர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு இருக்கிறார். அதையடுத்து பூந்தமல்லியில் உள்ள கிளைச்சிறையில் இவர் அடைக்கப்பட்டு உள்ளார். இப்படி அடைக்கப்பட்ட அந்த நபர் நேற்று திடீரென்று மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் உயிரிழந்தது தெரியவந்து உள்ளது. இதனால் அவர் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்து இருப்பாரோ என்ற அச்சம் மற்ற கைதிகளிடம் ஏற்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து விளக்கம் அளித்த சிறை நிர்வாகம் டேவிட்டை சிறையில் அடைப்பதற்கு முன்பே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை. அதுமட்டுமல்லாது டேவிட் பல மாதங்களாக தமிழகத்தில் சுற்றி வருகிறேன் எனக் கூறியுள்ளார். எனவே இது புதிய வகை கொரோனாவாக இருக்க வாய்ப்பில்லை. என்றாலும் கைதிகளின் மன ஆறுதலுக்காக அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் சிறை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இருப்பினும் பிரேசத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே டேவிட் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.