உதயநிதி ஸ்டாலின் திடீர் கைது: சாலை மறியலால் பரபரப்பு!

  • IndiaGlitz, [Friday,November 20 2020]

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிமுக, திமுக உள்பட அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன

இந்த நிலையில் நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் முன்னாள் முதல்வர் மு கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டார். இதனை அடுத்து அவர் சென்னையில் இருந்து இன்று காலை திருவாரூர் சென்றார்

இந்த நிலையில் சற்று முன்னர் திருக்குவளையில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கினார். ஆனால் திருக்குவளையில் அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நீடாமங்கலம்-மன்னார்குடி சாலையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு இருப்பதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது