'டான்' நான் நடிக்க வேண்டிய படம், நல்லவேளை நான் பண்ணலை: உதயநிதியின் ஆச்சரிய தகவல்

  • IndiaGlitz, [Tuesday,June 07 2022]

சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் நேற்று இந்த திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய உதயநிதி, ‘டான்’ திரைப்படம் நான் நடித்திருக்க வேண்டிய படம் என்றும் ஆனால் நல்லவேளை நான் நடிக்கவில்லை என்றும் கூறியது அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

‘டான்’ திரைப்படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்த ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் உதயநிதி ஸ்டாலின் நேற்றைய ‘டான்’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது: இந்த படத்தின் கதையை ஒரு நடிகர் கேட்டு, அதில் நடிக்க முடியாது என்று கூறினார், அந்த நடிகர் யார் என்று தெரியுமா சிவகார்த்திகேயன்? என்று கேள்வி எழுப்பி ‘அது நான் தான்’ என்று கூறினார்.

இந்த படத்தின் கதை எனக்கு நன்றாக பிடித்து இருந்தது. குறிப்பாக தந்தை மகன் சென்டிமென்ட் காட்சி நன்றாக இருக்கும் என்று இந்த படத்தில் நடிக்க முடிவு செய்தேன். ஆனால் ஸ்கூல் காட்சிகளில் என்னால் நடிக்க முடியாது என்பதால் இந்த படத்தில் நான் நடிக்கவில்லை. அதை சிவகார்த்திகேயன் மிகவும் அருமையாக நடித்து இருந்தார். நல்ல வேளை நான் இந்த படத்தில் நடிக்கவில்லை’ என்றும் உதயநிதி கூறினார் இதனை அடுத்து பேச வந்த சிவகார்த்திகேயன், ‘உங்களுக்கு கதை சொன்னதை இயக்குனர் என்னிடம் சொல்லவே இல்லை என்று ஆச்சரியத்துடன் கூறினார்.