பொதுவெளியில் கொடுக்கப்பட்ட சரமாரி சவுக்கடி… என்ன காரணம்?

  • IndiaGlitz, [Friday,January 29 2021]

இந்தோனேஷியாவின் ஆச்சோ மாகாணத்தில் பொதுவெளியில் வைத்து நேற்று, 2 ஆண்களுக்கு தலா 77 சரமாரி சவுக்கடி கொடுக்கப் பட்டது. இந்த சவுக்கடிகளை இஸ்லாமிய அதிகாரிகள் நிறைவேற்றி இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த 2 ஆண்களும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டார்கள் என்ற காரணத்திற்காக சவுக்கடி நிறைவேற்றப்பட்டு இருப்பது உலகத்தின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒருபால் சேர்க்கையை பல உலக நாடுகள் அங்கீகரித்து உள்ளன. இந்நிலையில் பழமைவாதத்தில் ஊறிய இஸ்லாமிய நாடான இந்தோனேஷியா ஓரினச் சேர்க்கையை இதுவரை அனுமதிக்கவே இல்லை. அதிலும் ஒட்டுமொத்த பழமைவாதத்தின் கூடாரமான பண்டா ஆச்சே மாகாணத்தில் இதுபோன்ற குற்றங்களுக்கு பொது இடத்தில் வைத்து சவுக்கடி கொடுப்பதைப் பழக்கமாக வைத்து உள்ளனர். மேலும் ஆசியாவிலேயே பண்டா ஆச்சே மாகாணத்தில் மட்டும்தான் ஷரியா இஸ்லாமியச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, தொட்டத்திற்கு எல்லாம் சவுக்கடி கொடுக்கும் பழக்கம் இருந்து வருகிறது.

ஓரினச் சேர்க்கை வைத்துக் கொண்டார்கள் என பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் நேற்று 27 மற்றும் 29 வயதுடைய இரு ஆண்களுக்கு தலா 77 சவுக்கடிகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தமன்சாரி எனும் இடத்தில் உள்ள நகரப் பூங்காவில் இந்த தண்டனை நிறைவேற்றப் பட்டபோது பல ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இருந்தனர். இந்தோனேஷியாவில் இதுவே முதல் முறையும் அல்ல. கடந்த செப்டம்பர் 2019 இல் பொதுவெளியில் காதல் செய்தார்கள் என்ற குற்றத்திற்காக 3 ஜோடிகளுக்கு சவுக்கடி தண்டனையை நிறைவேற்றி இருக்கிறார்கள். இந்தக் சவுக்கடி பெண்களுக்கும் பொருந்தும் என்பதுதான் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

பண்டா ஆச்சேவில் நிறைவேற்றப்பட்டு உள்ள ஷரியா இஸ்லாமியச் சட்டத்தின்படி பொதுவெளியில் காதல் செய்யக்கூடாது. அதோடு, மதுகுடிப்பது, சூதாட்டத்தில் ஈடுபடுவது, முறைகேடான உறவில் ஈடுபடுவது, கள்ளக்காதல் போன்ற அனைத்துக் குற்றங்களுக்கும் சவுக்கடி தண்டனைதான். இந்தச் சவுக்கடிகளை பொது இடத்தில் வைத்துத்தான் இஸ்லாமிய அதிகாரிகள் நிறைவேற்றுவர். சவுக்கடியைக் கொடுக்கும்போது குற்றவாளிகளின் முகத்தை மூடி தோல் பிய்த்துப்போகும் அளவிற்கு அடிப்பதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர்.

இந்நிலையில் ஜனநாயகத்தில் வளர்ந்து விட்ட பெரும்பாலான நாடுகள் இத்தகைய தண்டனைகளைப் பார்த்து விமர்சித்து வருகின்றன. என்றாலும் சுமத்ரா போன்ற பகுதிகளில் இன்றைக்கும் இதுபோன்ற குற்றங்களுக்கு பொது இடத்தில் வைத்து சவுக்கடி கொடுக்கும் பழக்கம் வழக்கத்தில் இருந்து வருகிறது.