கள்ளக்குறிச்சி உயிர்பலிக்கு அரசின் அலட்சியமே காரணம்: தவெக தலைவர் விஜய் கண்டனம்..

  • IndiaGlitz, [Thursday,June 20 2024]

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 30 பேர்கள் வரை பலியாகி இருக்கும் சம்பவம் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இது குறித்து தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாக பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.

இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.