கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பானது: த்ரிஷாவின் பதிவு..!

  • IndiaGlitz, [Tuesday,February 20 2024]

கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது என்று நடிகை த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ராஜு என்பவர் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது பேட்டிக்கு பல திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதிமுகவில் உள்ள எம்எல்ஏ வெங்கடாசலம் என்பவர் பிரபல நடிகை தான் வேண்டும் என்று கூறியதாகவும் அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அந்த நடிகை அதற்கு ரூ.25 லட்சம் வாங்கியதாகவும் அவர் கூறியிருந்தார். அவரது இந்த பேட்டிக்கு இயக்குனர் சேரன், நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் நடிகை த்ரிஷா சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து கூறியபோது பிறருடைய கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மற்றும் கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது. இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன். இனிமேல் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தும் சட்டம் சரியாக செய்யும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.