நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்: ஏ.வி.ராஜூவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய த்ரிஷா

  • IndiaGlitz, [Thursday,February 22 2024]

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் அதிமுக பிரமுகர் ஏ.வி ராஜூவுக்கு த்ரிஷா தரப்பில் இருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நடிகை த்ரிஷா குறித்து முன்னாள் அதிமுக பிரமுகர் ஏவி ராஜு சமீபத்தில் அளித்த பேட்டியின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு த்ரிஷா தனது சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் திரை உலகினர் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகை த்ரிஷா தன்னை பற்றி தரக்குறைவாக பேசிய ஏவி ராஜு அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அந்த நோட்டீஸில் தன்னை பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு 24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் முன்னணி செய்தி நிறுவனங்கள் வாயிலாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது பேச்சால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதற்கு அவர் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஏவி ராஜு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நோட்டீஸ் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.