ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த த்ரிஷா இயக்குனர்

  • IndiaGlitz, [Monday,July 04 2016]

பிரபல நடிகை த்ரிஷா கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நிலையில் தற்போது அவர் தனுஷுடன் 'கொடி' மற்றும் திகில் படமான 'நாயகி' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இவற்றில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ள 'நாயகி' தெலுங்கில் வரும் 8ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்துள்ள புதிய தகவலின்படி ஜூலை 15ஆம் தேதி இருமொழிகளிலும் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்த படத்தின் இயக்குனர் கோவி தனது சமூகவலைத்தளத்தில் கூறியுள்ளதாவது: ''நாயகி' படத்தின் தமிழ்ப்பதிப்பு சென்சார் தாமதம் காரணமாக இந்த படம் ஜூலை 15-ல் ரிலீஸ் ஆகிறது. தாமதத்திற்கு வருந்துகிறேன்' என்று கூறியுள்ளார்.
இரண்டு வித்தியாசமான வேடங்களில் த்ரிஷா, கணேஷ் வெங்கட்ராமன், ஜெயப்பிரகாஷ், மனோபாலா, கோவை சரளா, பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை த்ரிஷாவின் மேனேஜர் கிரிதர் தயாரித்துள்ளார்.