தமிழகத்தில் இன்று கொரோனா பாசிட்டிவ் எத்தனை பேர்? அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை தினமும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்து வரும் நிலையில் இன்று ஒரு சிறிய இடைவெளிக்கு பின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 என்றும் அதில் 34 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்கள் என்றும்  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1242ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக தினந்தோறும் 50க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றும் இன்றும் 50க்கும் குறைவானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தமிழகத்தில் கொரோனாவால் இன்று இருவர் உயிரிழந்துள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து 118 பேர் குணமடைந்துள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.