திருவள்ளுவர் மனைவி வாசுகி கேரக்டர்.. கடுமையாக விரதம் இருக்கும் நடிகை.!

  • IndiaGlitz, [Sunday,July 07 2024]

உலகப் பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தில் திருவள்ளுவர் மனைவியாக நடிக்கும் நடிகை கடுமையாக விரதம் இருந்து வருவதாகவும் படப்பிடிப்பு முழுவதும் வரை விரதம் இருக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பைபிளுக்கு பின் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர் என்ற நிலையில் ’திருக்குறள்’ என்ற பெயரிலேயே திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் திருவள்ளுவர் கேரக்டரில் கலைச்சோழன், வாசுகி கேரக்டரில் தனலட்சுமி, நக்கீரன் கேரக்டரில் சுப்ரமணிய சிவா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை விஐடி வேந்தர் விசுவநாதன் வழங்க, டிபி ராஜேந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திருவள்ளுவர் மனைவி வாசுகி கேரக்டரில் நடிக்கும் தனலட்சுமி கடுமையாக விரதம் இருந்து வருவதாகவும் அசைவ உணவு சாப்பிடாமல் விரதம் இருந்து வருவதாகவும் படப்பிடிப்பு முடியும் வரை இந்த விரதத்தை கடைப்பிடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

வாழ்ந்து மறைந்த மேதைகளின் கேரக்டரில் நடிக்கும் போது அந்த கேரக்டருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த விரதத்தை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் 2000 வருடத்திற்கு முன்பு இருந்த தமிழ்நாட்டை பதிவு செய்யப் போவதாகவும் திருக்குறளை இந்த தலைமுறையினர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் இந்த படம் இருக்கும் என்றும் இந்த படத்தை இயக்கி வரும் ஏஜே பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.