மதுரையில் போலீஸ் விசாரணைக்குச் சென்ற கல்லூரி மாணவர் மரத்தில் பிணமாக மீட்பு… அடுத்த சாத்தான்குளமா???

 

சாத்தான்குள காவல் நிலையத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு இருந்த தந்தை மகன் இருவரும் உயிரிழந்த விவகாரமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தற்போது மதுரையில் அடுத்த பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. மதுரை அடுத்த பேரையூர் தாலுகா பகுதியில் உள்ள அணைக்கரைப்பட்டி எனும் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

அணைக்கரைப்பட்டியில் வசித்து வரும் கண்ணியப்பனின் மூத்த மகன் இதயக்கனி. இவர் புனிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் புனிதாவை காணவில்லை என்று கடந்த 10 நாட்களுக்கு முன்பு சாப்டூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டு இருப்பதகாவும் தகவல் கூறப்படுகிறது. இந்த புகாரின் பேரில் சாப்டூர் காவல் நிலைய அதிகாரிகள் அணைக்கரைப்பட்டியில் உள்ள இதயக்கனி வீட்டிற்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்திருக்கின்றனர். ஆனால் இதயக்கனி அங்கு இல்லை என்பதால் திரும்பி சென்றதாகவும் கூறப்படுகிறது.

நேற்று மீண்டும் இதயக்கனி வீட்டிற்கு போலீஸ் விசாரணைக்கு வந்ததாகவும் அப்போது இதயக்கனியின் தம்பி ரமேஷ் (கல்லூரி மாணவர்) மட்டுமே இருந்ததால் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அந்த விசாரணையில் ரமேஷ் போலீஸாரிடம் முன்னுக்குப்பின் முரணாக தகவல் கூறியதாகவும் அதனால் அவரை காவலர்கள் அழைத்து சென்றனர் என்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

நேற்று மாலை 6 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரமேஷ் இரவு முழுவதும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் பதட்டமடைந்து பல இடங்களிலும் தேடியிருக்கின்றனர். இந்நிலையில் இன்று அணைக்கரைப்பட்டி கிராமத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் மரத்தில் ஒரு சடலம் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அது ரமேஷ் என்றும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் 500 க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுகூடி விட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

இச்சம்பவம் தொடர்பாக தற்போது சாப்டூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் 4 காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மரத்தில் பிணமாகத் தொங்கிய சம்பவம் மதுரை பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.