'ஜெய்பீம்' விவகாரம்: பாமக அன்புமணிக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முக்கிய கோரிக்கை

  • IndiaGlitz, [Monday,November 15 2021]

அரசியல், ஜாதி, மத, சார்பின்றி கல்விப்பணியில் கலங்கரை விளக்கமாக செயல்பட்டு வரும் சூர்யாவை விமர்சிப்பதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு தென்னிந்திய வர்த்தக திரைப்பட வர்த்தக சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ’ஜெய்பீம்’ திரைப்படத்தில் தொழில்நுட்ப கலைஞர்களால் காண்பிக்கப்பட்ட தங்களின் கட்சியின் முத்திரையை நீங்கள் அடையாளப்படுத்தி அதை நீக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தீர்கள்.

எங்களுடைய தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் உறுப்பினர் சூர்யா அவர்கள் உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த காட்சியை உடனடியாக நீக்கி விட்டார். அந்த முத்திரையை படத்தில் பயன்படுத்தியதில் தயாரிப்பு நிறுவனத்திற்கோ, படத்தின் நாயகன் சூர்யாவுக்கோ எள்ளளவும் தொடர்பு இல்லாத நிலையில் உங்கள் கட்சியினர் சூர்யாவை தொடர்ந்து விமர்சித்து வருவது எங்கள் திரைப்பட வர்த்தக சபைக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.

அரசியல், ஜாதி, மத, இன சார்பு இன்றி சமூக அக்கறையோடு ஈகை குணத்துடன் விளிம்புநிலை மாணவர்கள் மீது விருட்சமான பார்வை கொண்டு கல்விப் பணியில் கலங்கரை விளக்காய் செயல்பட்டு செயலாற்றி வரும் சூர்யா அவர்களை விமர்சிப்பதை தவிர்க்கும்படி வருத்தத்துடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்’ என தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தனது அறிக்கையில் கூறியுள்ளது.