தமிழகத்தின் முதல் பழங்குடியின பெண் நீதிபதி.. திருக்குறளை மேற்கோள்காட்டி வாழ்த்திய இசையமைப்பாளர்..!

  • IndiaGlitz, [Tuesday,February 13 2024]

தமிழகத்திலிருந்து முதல் முதலாக பழங்குடியின பெண் ஒருவர் நீதிபதியாக தேர்வு பெற்றதை அடுத்து பிரபல இசையமைப்பாளர் தனது சமூக வலைதளத்தில் அந்த பெண்ணுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை என்ற பகுதியைச் சேர்ந்த ஸ்ரீபூபதி என்ற 22 வயது பெண் கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதி தேர்வு எழுதினார். இந்த தேர்வில் அவர் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது நீதிபதி பயிற்சிக்கு செல்ல உள்ளார்.

நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று சொந்த கிராமத்திற்கு திரும்பிய ஸ்ரீபதிக்கு ஊர் மக்கள் மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அடிப்படை வசதி கூட இல்லாத ஒரு கிராமத்தில் இருந்து தீவிர முயற்சியால், கடுமையான உழைப்பால் படித்து பட்டம் பெற்றதோடு தற்போது நீதிபதியும் ஆகியுள்ளார்.

ஸ்ரீபதி நீதிபதி ஆவதற்கு பக்கத்துணையாக இருந்தவர் அவருடைய கணவர் மற்றும் அவரது தாய் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் முதல் பழங்குடியின பெண் நீதிபதிக்கு பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில்

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை

என்ற திருக்குறளை பதிவு செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.