இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது, தோல்விக்கு இதுதான் காரணம்; சிஎஸ்கே கேப்டன் தல தோனி..!

  • IndiaGlitz, [Saturday,April 01 2023]

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் நேற்று 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிதொடர் தொடங்கியது. முதல் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் அடித்தது. ருத்ராஜ் கெய்க்வாட் மிக அபாரமாக விளையாடி 92 ரன்கள் அடித்தார் என்பதும் அதில் ஒன்பது சிக்சர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ருத்ராஜ் மிக சிறப்பாக விளையாடினாலும் கான்வே, மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பத்தி ராயுடு, ஜடேஜா ஆகிய பேட்ஸ்மேன்கள் பந்துகளை வீணாக்கியதோடு எளிதில் விக்கெட்டுக்களையும் இழந்தனர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனை அடுத்து 179 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி 19.2 ஓவர்களில் 182 ரன்கள் அடித்து அபாரமாக வெற்றி பெற்றது. குறிப்பாக 19 வது ஓவரை வீசிய தீபக் சஹாரின் ஓவரில் ரஷீத் கான் மிக அபாரமாக பவுண்டரிகளையும் சிக்சர்களையும் அடித்து குஜராத் அணி வெற்றியை உறுதி செய்தார்.

இந்த நிலையில் போட்டிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தல தோனி இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் கூடுதலாக 10 முதல் 20 ரன்கள் அடித்திருக்க வேண்டும் என்றும் பந்துவீச்சாளர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். பந்துவீச்சாளர்கள் நோபால்களை வீசுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நோபால்களை தவிர்ப்பது நமது கையில் தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் ருத்ராஜ் கெய்க்வாட் மிகவும் சிறப்பாக விளையாடினார் என்றும் அவரது பேட்டிங்கை வெளியிலிருந்து பார்க்க மிகவும் அழகாக இருந்தது என்றும் அவரை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும் என்றும் தெரிவித்தார்.