அஜீத் நடிப்பில் 'பாட்ஷா 2'. சுரேஷ்கிருஷ்ணாவின் ஆசை

  • IndiaGlitz, [Saturday,September 12 2015]

நேற்று முன் தினம் நடைபெற்ற ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் 90வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், "பாட்ஷா படம் போல் இன்னொரு படம் வர வாய்ப்பில்லை' என்று கூறியதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் சூப்பர் ஸ்டாரின் இந்த பேச்சால் 'பாட்ஷா' படத்தின் இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா கூறியதாவது: "நான் இயக்கிய 'பாட்ஷா' படத்தை பற்றி ரஜினியும், மற்றவர்களும் இன்னமும் பேசி வருவது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அவர் கூறுவதுபோல், உண்மையிலேயே பாட்ஷா' படம் போன்று இன்னொரு படம் எடுக்க முடியாது. இந்த படத்தை அந்தளவுக்கு நாங்கள் அணுஅணுவாக ரசித்து எடுத்திருந்தோம். அதனால்தான் மக்கள் மனதில் இன்றும் இப்படம் நிலைத்து நிற்கிறது.

அஜித்தை வைத்து பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை நான் அஜித்தை சந்தித்து இதுகுறித்து பேசியது கிடையாது. அஜித் ஒரு பெரிய சூப்பர் ஸ்டார். அவரை வைத்து பாட்ஷா மாதிரியான ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அது அமைந்தால் கண்டிப்பாக அவருக்காக கதை அமைத்து படம் இயக்குவேன்" என்று கூறியுள்ளார்.

சுரேஷ் கிருஷ்ணாவின் ஆசையை அஜீத் நிறைவேற்றுவாரா? அப்படியே அஜீத் நடிக்க ஒப்புக்கொண்டாலும் 'பாட்ஷா' படத்திற்கு இணையாக அதன் இரண்டாம் பாகம் அமையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.