சரியான நேரத்தில் தல ரசிகர்களின் சரியான சமுதாய பணி

  • IndiaGlitz, [Sunday,February 19 2017]

நடிகர்களின் ரசிகர்கள் என்றால் படம் வெளியாகும் தினத்தில் கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்பவர்கள் மட்டுமின்றி ஆக்கபூர்வமான சமுதாய பணிகளிலும் ஈடுபடுபவர்கள் என்பது அவ்வப்போது நிரூபணம் ஆகிக்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போதைய தலையாய கடமையான சீமைக்கருவேல மரங்களை வெட்டி வீழ்த்துவதில் நடிகர்களின் ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக சமீபத்தில் மதுரையை சேர்ந்த தல அஜித் ரசிகர்கள் அப்பகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஈடுபட்டுள்ளனர். நேற்று மதுரையில் வேலம்மாள் கல்லூரி அருகில் உள்ள பனையூர் என்ற பகுதியில் இந்த பணியில் ஈடுபட்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்தனர்.

நீர் ஆதாரத்திற்கு பெரும் சவாலாக விளங்கக்கூடிய, மண்ணை மலடாக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் சரியான நேரத்தில் சரியான சமுதாய பணியில் ஈடுபட்டுள்ள தல அஜித் ரசிகர்களை போல மற்ற நடிகர்களின் ரசிகர்களும் ஈடுபட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நாட்டை யாராவது ஆட்சி செய்துவிட்டு போகட்டும். இப்போதைக்கு நமது முழு கவனமும் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு இளைஞர்களும் உணர வேண்டும்