ஓய்வெல்லாம் கிடையாது… கிரிக்கெட் வீரர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த பிசிசிஐ!

நியூசிலாந்துக்கு எதிரான 3டி20 மற்றும் 2 டெஸ்ட் தொடர் போட்டி முடிவடைந்த நிலையில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவுடன் அடுத்த தொடர் போட்டியில் விளையாடவுள்ளது. இதையடுத்து அடுத்த 3 நாட்களுக்குள் இந்திய அணி வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என்று பிசிசிஐ அதிரடி உத்தரவிட்டுள்ளது.

நியூசிலாந்து தொடரை அடுத்து 3டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடருக்காக இந்திய வீரர்கள் தென்ஆப்பிரிக்காவிற்கு செல்லவிருந்தனர். ஆனால் தற்போது ஒமைக்ரான் வகை பாதிப்பு காரணமாக டி20 போட்டிகள் ரத்துச் செய்யப்பட்டு உள்ளன. இதனால் வரும் 26 ஆம் தேதி நேரடியாக டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் டெஸ்ட் தொடர் போட்டியில் விளையாட இருக்கும் 21 தென்ஆப்பிரிக்கா வீரர்களை அந்த அணி தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

அதேபோல இந்திய அணியும் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய வீரர்களை விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ஓய்வில் இருக்கும் ரோஹித் சர்மா, பும்ரா, முகமது ஷமி போன்ற வீரர்களை விரைவில் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்று பிசிசிஐ உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நியூசிலாந்து தொடரில் விளையாடி முடிந்த இந்திய வீரர்களும் அணிக்குத் திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து தென்ஆப்பிரிக்கா செல்லவுள்ள இந்திய அணி வீரர்கள் வரும் டிசம்பர் 11 ஆம் தேதி முதல் மும்பையில் இருக்கும் நட்சத்திர ஹோட்டல்களில் பயோபபுள் முறையில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் ஒருவாரம் கழித்து 16 ஆம் தேதி வாக்கில் தென்ஆப்பிரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே ஃபார்மில் இல்லாத ரஹானோ மற்றும் புஜாராவ இருவரும் தென்ஆப்பிரிக்கா தொடரில் விளையாடுவார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.