வருமான வரிசோதனையால் எனக்கு ஏற்பட்ட பாதிப்பு இதுதான்: நடிகை டாப்ஸி

  • IndiaGlitz, [Saturday,March 06 2021]

தனுஷ் நடித்த ’ஆடுகளம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்து வருபவர் நடிகை டாப்ஸி என்பதும், தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை டாப்ஸி மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகிய இருவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் தான் இருவரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடப்பதாக ஒரு வதந்தி பரவி வருகிறது.

இந்த நிலையில் தன்னுடைய வீட்டில் நடந்த வருமான வரி சோதனை குறித்து கருத்து தெரிவித்த நடிகை டாப்ஸி, ‘வருமான வரி சோதனை குறித்து எனக்கு எந்தவித கவலையும் இல்லை. எனக்கு சொந்தமான பாரிஸீல் உள்ள வீட்டுக்கான சாவிகள் மற்றும் நான் நிராகரித்த 5 கோடி ரூபாய் காசோலையை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றது மட்டுமே இந்த சோதனையால் எனக்கு ஏற்பட்ட பாதிப்பு’ என்று நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.

நடிகை டாப்ஸி தற்போது தீபக் சுந்தர்ராஜன் இயக்கி வரும் ஒரு தமிழ்ப்படத்திலும் நான்கு இந்தி படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.