விஷாலை வைத்து படம் எடுக்க தடை.. தயாரிப்பாளர் சங்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள காரணம்..!

  • IndiaGlitz, [Friday,July 26 2024]

தயாரிப்பாளர் சங்க பண முறைகேடு விவகாரம் நடிகர் விஷாலுக்கு எதிராக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இனி விஷாலை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

கடந்த 2017-2019ஆம் ஆண்டு வரையிலான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த திரு.விஷால் அவர்கள் மீது எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், 2019-ம் ஆண்டில் இருந்த தமிழ்நாடு அரசு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமித்தது. 2019-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட தனி அதிகாரி சங்கத்தின் கணக்கு வழக்குகளை சரிபார்க்க வேண்டும் என்று ஒரு தனி ஆடிட்டரை நியமித்தார்.

அந்த தனி ஆடிட்டர் கணக்கு வழக்குகளை சரி பார்த்துக் அளித்த அறிக்கையில், அப்பொழுது சங்கத்தில் இருந்த நிதியினை தவறான முறையில் எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்கள். அதில், சங்கத்தின் வங்கி கணக்கில் ஏற்கனவே வைப்பு நிதியாக வைக்கப்பட்டிருந்த ரூ.7 கோடியே 50-லட்சம், மற்றும் 2017-2019 ஆண்டுகளில் வரவு-செலவு ரூ.5 கோடியில் சேர்த்து சுமார் ரூ 12 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்கள்.

அவ்வாறு சங்கத்திலிருந்து முறைகேடாக செலவழிக்கப்பட்ட தொகையை சங்கத்திற்கு திரும்ப வேண்டும் என்று திரு.விஷால் அவர்களுக்கு பலமுறை தெரியப்படுத்தியும், அவர் இதுநாள் வரை எந்தவிதமான பதிலும் தராமல் உள்ளார்.

ஆகவே, மேற்படி விஷயத்தினை சரி செய்யும் பொருட்டு, ஏற்கனவே தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழுவின் பரிந்துரைப்படி பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இனிவரும் காலங்களில் நடிகர் திரு.விஷால்-அவர்களை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினை கலந்தாலோசித்து அதன் பின்னர் தங்களது பணிகளை தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.