close
Choose your channels

சி எஸ் கே மீது தமிழர்களுக்கு இருக்கும் தீராத காதல்

Saturday, April 7, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'ரமணா' திரைப்படத்தில் யூகி சேது ஒரு விஷயத்தை ஆணித்தரமாக பதிவு செய்வார். "தமிழர்கள் யார் மீதும் அவ்வளவு எளிதில் அன்பு வெச்சுடே மாட்டாங்க, அப்படி வெச்சுட்டா அது கடைசி வரைக்கும் மாறாது." என்னதான் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு அதிலும் ஐபிஎல் என்பது பொழுதுபோக்கின் நிழலில் விளையாடப்படும் ஆட்டம் என்கிற பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், கடந்த பத்தாண்டுகளாக கோடை விடுமுறையை குழந்தைகள் முதல் வளர்ந்த குழந்தைகள் வரை குதூகலத்துடன் பார்ப்பதென்பது வருடாவருடம் அதிகரித்துக்கொண்டேதான் போகிறது. 

பெட்டிங் என்கிற வலையில் சிக்கி நிர்வாகமும் அணியும் இரண்டாண்டுகள் தடையைத்தாண்டி மீண்டும் கிட்டத்தட்ட அதே அணியை உருவாக்கி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு விதமான உற்சாகத்தோடு களமிறங்கியிருப்பதே ஒரு கலக்கலான அனுபவம் தான். கடந்த வருடம் திமிழ்நாடு ப்ரீமியர் லீக் ஆரம்பித்த நாள் அன்று, சென்னையின் தடை விலக, அன்றே  தோனி தன்னுடைய சொந்த நிறுவனத்திலிருந்து "திரும்ப வந்துட்டேன்னு சொல்லு" என்கிற வாசகம் தாங்கிய டீ ஷர்ட்டை வெளியிட அப்போது பற்றிக்கொண்டது சிஎஸ்கே, தீ. மேலும் தன்னுடைய சொந்த வலைப்பக்கத்தில் ஏழாம் நம்பர் ஜெர்சியை அணிந்து புகைப்படம் பதிந்தும் எவ்வாறு ரசிகர்கள் தன மீது அன்பு வைத்துள்ளார்களோ அதை விட டபுளாக திரும்ப அளித்தார் தோனி. 

 

வீரர்களின் ஏலம் துவங்குவதற்கு முன்பாக, ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் மூன்று வீரர்களை இருப்பில் வைத்துக்கொள்ளலாம் என்ற செய்த வந்தவுடனேயே தோனியின் சிஎஸ்கே  வருகை உறுதியாயிற்று. தோனி சிஎஸ்கே வருகையை உறுதிப்படுத்தி கையெழுத்திடும் வீடியோவில் அவரது மனைவி "back home mahi" என்கிற கேள்விக்கு சிறிய புன்னகையோடு தலையசைத்ததே அவரும் இரண்டாண்டுகள் சென்னை அணியை எவ்வளவு மிஸ் செய்தார் என்பதற்கு சாட்சி. 

பத்து வருடங்களுக்கு முன்பு, கொல்கத்தா, பெங்களூரு, பஞ்சாப், டெல்லி, மும்பை, ஹைதெராபாத் போன்ற அணிகள் யுவராஜ், சேவாக், கங்குலி, டிராவிட், லக்ஷ்மன், சச்சின் என அவர்களின் மண்ணின் மைந்தர்களை ஐகான் வீரர்களாக நியமித்து அணியை கட்டமைக்கவே, சென்னைக்கு தோனி வந்தார். அப்போதே அதிக விலைக்கு வாங்கபப்ட்ட வீரரான தோனி இப்போது நினைத்திருந்தால் வேறொரு அணிக்கு நினைத்துப்பார்க்கவே முடியாத விலைக்கு சென்றிருப்பார். ஆனால் சென்னையின் ரசிகர்கள் தோனி மீதும் தோனி சென்னையின் மீதும் கொண்டிருக்கும் அளவுகடந்த அன்புதான் இதை சாத்தியப்படுத்தியிருக்கிறது. 

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்கிற மாதிரி, தோனியுடனேயே ரெய்னாவும் ஜடேஜாவும் பின்தொடர, 'ரைட் டு மாட்ச்' அடிப்படையில் ப்ராவோவும், டு பிளெஸ்ஸியும் சேர்ந்து அசாதாரண சென்னை அணியை கட்டமையாததாகிவிட்டது. எப்போதுமே ஏலத்தில் சென்னையின் வீரர்களை குறிவைத்தே அதிக விலைக்கு ஏற்றிவிட்டு வேடிக்கை பார்ப்பது மற்ற அணிகளுக்கு வழக்கம். ஏனென்றால் சென்னையின் பலம் என்பது அதிலிருக்கும் வீரர்கள் மட்டுமல்ல அவர்களிடம் இருக்கும் சகோதரத்துவம் மற்றும் நேர்த்தி. தோனி அதிகம் வெவ்வேறு ஆட்களை மாற்றிப்போட்டு வெவ்வேறு வீரர்களோடு விளையாடுவதை விரும்ப மாட்டார். ஆதலாலேயே பஞ்சாப் அணி அஷ்வினை குறிவைத்து தூக்கியது மட்டுமல்லாமல் அவரை தலைவராகவும் நியமித்து விட்டது. 

கடந்த காலங்களில், சென்னை மும்பையிடமிருந்து ப்ராவோ, ஸ்மித் போன்ற வீரர்களை எடுத்து அவர்களை ஒட்டுமொத்த சிஎஸ்கே  மாற்றியது. அதே போல இவ்வருடம் மும்பையின் ராயுடு, பத்தாண்டுகளாக விளையாடிய ஹர்பஜன் என இருவரை இழுத்தது மும்பைக்கெதிராக நடக்கவிருக்கும் முதல் போட்டிக்கே இது பக்கபலமாக இருக்கும். எக்ஸ்பிரஸ் வேகத்தில் வீசக்கூடிய பந்துவீச்சாளர்களை எப்போதும் சென்னை நாடியதில்லை. ஆட்டத்தின் தேவைகளை கருதி அதற்கேற்ப வீரர்களை குறிவைப்பதே தோனி மற்றும் ஃபிளெமிங்கின் சூட்சுமம். வாட்சன், ப்ராவோ, இங்கிலாந்தின் மார்க் வுட், சென்னையின் ஆசிப் என வேகப்பந்து வீச்சாளர்களையும் அளவிற்கு அதிகமான சுழற்பந்து வீச்சாளர்களை வசப்படுத்தியுள்ளது. 

அடுத்த வருடம் உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு, தோனி தன்னுடைய வழக்கமான ஃபினிஷிங் ரோலிலிருந்து வேறுபட்டு 4-5 நிலை வீரராக களமிறங்குவார் என அணியின் பயிற்சியாளர் தெரிவித்தது எல்லோருக்கும் மகிழ்சியாக இருந்தது. ரெய்னா, ஜடேஜா போன்றவர்களுக்கும் இந்த தொடர் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும். அஸ்வின் போன்ற வீரர்களை சென்னை இழந்தாலும், நம்மிடமிருந்து சென்ற வீரர் இன்னொரு அணிக்கு தலைமை தாங்குவதென்பதே சென்னையின் பெருமையை பறைசாற்றுவதே. 

அடுத்த 7 வாரங்கள் கொண்டாட்டம்தான். 

-பத்மநாபன் நாகராஜ்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment