தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: திரையரங்குகளுக்கு முக்கிய கட்டுப்பாடு..!

  • IndiaGlitz, [Monday,April 03 2023]

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்றும் தினசரி பாதிப்பு நாடு முழுவதும் தற்போது 4000 ஐ தாண்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே மருத்துவமனைகள் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அவர்கள் கூறுகையில் ’தமிழகத்தில் கொரோனா பரவல் பெரிய அளவில் இல்லை என்பதால் அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கி கொள்ள வேண்டும்.

ஏற்கனவே மருத்துவமனைகளில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்ட நிலையில் இனி திரையரங்குகள், ஏசி வசதி உள்ள அரங்குகள், கவியரங்கங்கள் ஆகியவற்றில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். எனவே திரையரங்கிற்கு படம் பார்க்க செல்லும் ரசிகர்கள் இனி மாஸ்க் உடன் தான் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.