தேர்தல் அறிக்கையால் பிரச்சாரக் களத்தில் தொடர்ந்து பாராட்டப் படும் தமிழக முதல்வர்!

வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அதிமுக கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. இந்த அறிக்கையில் விவசாயிகள், நெசவாளர்கள், பெண்கள், இலங்கை தமிழர்கள், மாணவர்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது கொங்கு மண்டலப் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அங்கு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை ஏற்படுத்தியது, பயிர்க்கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகளை மக்களிடம் எடுத்துக் கூறி ஓட்டு சேகரித்து வருகிறார்.

மேலும் தான் ஒரு விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதையும் முதல்வர் தொடர்ந்து சுட்டிக் காட்டிவருகிறார். இதனால் விவசாயிகளின் கஷ்டத்தை மிக எளிதாக உணர்ந்து கொள்ள முடியும் என்றும் அவர் மக்கள் முன் எடுத்துரைத்தார். மேலும் காவிரி டெல்டா பிரச்சனை தொடர்பாக அதிமுக அரசு சந்தித்த சவால்களையும் சுட்டிக் காட்டினார். மேலும் இந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் நிறைவேற்றப்பட இருக்கிற தேர்தல் அறிவிப்புகள் அனைத்தையும் எடுத்துக் காட்டி மக்கள் முன் உரையாற்றி வருகிறார். இந்த உரையாடல்களின்போது தேர்தல் அறிக்கை குறித்து பலரும் பாராட்டு தெரிவித்து வருவதாக அதிமுக சார்பில் தகவல் கூறப்படுகிறது.