நீ இல்லாமல் இந்த பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை: திருமண நாளில் நெகிழ்ச்சி பதிவு செய்த இயக்குனர்..!

  • IndiaGlitz, [Thursday,February 23 2023]

தமிழ் திரை உலகின் பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தனது 21வது திருமண நாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் தனது மனைவி குறித்து நெகிழ்ச்சியான பதிவை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பதை அடுத்து அந்த பதிவு வைரலாகி வருகிறது

தமிழ் திரை உலகில் பா. ரஞ்சித் இயக்கிய ’அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் சி.வி. குமார். அதன் பிறகு இவர் தயாரித்த ’சூது கவ்வும்’ ’பீட்சா’ ’தெகிடி’ ’முண்டாசுப்பட்டி’ உள்பட பல திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ‘மாயவன்’, ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’, ‘கொற்றவை’ உள்ளிட்ட ஒரு சில படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சி.வி.குமார் இன்று தனது 21-வது திருமண நாளை கொண்டாடி வருகிறார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பதாவது: நான் வெற்றியடைந்தது எனது திறமை மற்றும் உழைப்பினால் மட்டுமல்ல, இந்த பெண்ணின் ஆதரவால்தான், எனது 21 வருட வெற்றிகரமான திருமண வாழ்வில் இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு முழு ஆதரவை அளித்தவர் எனது மனைவி தான். என் பெற்றோரைப் போல என்னை வெற்றி பெறச் செய்தாய். நீ இல்லாமல் நான் இந்த பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை. 21வது திருமணநாள் வாழ்த்துக்கள் என் அன்பே. நான் உங்களுக்கு நிறைய கடன்பட்டிருக்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.