தடுப்பூசி செலுத்தி கொண்ட தமிழ் இயக்குநர்… முதல்வருக்கு அறிக்கை வெளியிட்டு பாராட்டு!

  • IndiaGlitz, [Wednesday,June 09 2021]

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வரும் அமீர் தனது குடும்பத்தினரோடு சேர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். அதற்கு பிறகு தடுப்பூசி பணியை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார்.

இயக்குநர் அமீர் சென்னை ஓமந்தூரார் சிறப்பு பல்நோக்கு அரசு மருத்துவமனையில் தனது குடும்பத்தாரோடு சேர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். மேலும் இதுகுறித்து, “மிகவும் சுகாதாரமாகவும் சிறந்த உபசரிப்புடனும் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி பணியைச் சிறப்பாக செய்து கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசிற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அதோடு தடுப்பூசி குறித்த தவறான சில கருத்துகளும் நம்மிடையே உலவுகின்றன. இதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா நோயிலிருந்து முழுமையாக விடுபடுவோம். வளமான ஆரோக்கியமான நோயில்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.