மக்களவை தேர்தல் 2024: சமீபத்தில் கட்சி தொடங்கிய தமிழ் நடிகர் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,February 28 2024]

தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த தேர்தலில் ஏற்கனவே ஒரு சில திரை உலகை சேர்ந்த பிரபலங்கள் போட்டியிட போவதாக கூறப்பட்டது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக நடிகை கீர்த்தி சுரேஷ் அப்பா தயாரிப்பாளர் சுரேஷ், மலையாள நடிகர் சுரேஷ் பாபு, நடிகை ஷோபனா உள்பட ஒருசிலர் இந்த தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது தமிழகத்திலும் நடிகைகள் குஷ்பூ, கௌதமி போன்ற நடிகைகளுக்கு போட்டியிட அரசியல் கட்சிகள் வாய்ப்பளிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்திய ஜனநாயக புலிகள் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான் ஆரணி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மயிலம் மக்கள் மனம், மகிழம்பூவாய் மகிழ, செஞ்சி கோட்டையின் செம்மாந்தர்கள் கொடி பறக்க, செய்யாறு மக்களின் சோற்றில் நெய்யாறு ஓட, நான் சுசுவாசி அல்ல, பந்தா வாசி அல்ல, மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வந்த-வாசி. அரசியல் பொதுநல, சந்நியாசி. போளூர் மக்களின் புகழூர் தாய்மார்கள் வயிற்றில் பால் வார்த்திடும், பாலூர், ஆரணியே, அன்ண பட்சினியே, நினை, என் ,மனதின் ஆழ்நிலை சக்தியாய், தாயார், மகளாய் துதித்து, பணி செய்ய, ஆணையிடுவாய், தாழ்திறவாய், தரணி போற்றும், ஆரணியே” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகான் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது,.