சூர்யா எழுதிய மன்னிப்பு கடிதம்

  • IndiaGlitz, [Tuesday,May 17 2016]

நடிகர் சூர்யாவின் '24' திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பொதுமக்களுக்கு அவர் ஒரு மன்னிப்பு கடிதத்தை எழுதியுள்ளார். நேற்று நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்க இயலாத நிலையை அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். சூர்யா தனது கடிதத்தில் கூறியுள்ளதாவது:

வணக்கம். '24' படத்திற்கு அனைவரிடமிருந்து கிடைத்திருக்கும் வரவேற்புக்கும், ஆதரவுக்கும் என் மனப்பூர்வமான நன்றி.

நன்றி தெரிவிக்கும் இந்த நேரத்தில், மக்களிடம் என்னுடைய மன்னிப்பையும் நான் தெரிவித்து கொள்கிறேன். முதல்முறையாக என்னுடைய வாக்குரிமையை நிறைவேற்ற இயலாத சூழ்நிலையில் இருக்கின்றேன். அது எனக்கு குற்றவுணர்ச்சியையும், வருத்ததையும் அளிக்கிறது. அதற்காக அனைவரிடமும் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறெனெ.

வாக்களிக்கும் உரிமையை, கடமையை அனைவரும் நிச்சயம் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் உடையவன் நான்

இதுவரை ஒரு தேர்தலிலும் என்னுடைய வாக்குரிமையை செலுத்தாமல் நான் இருந்தது இல்லை. இந்த முறை வெளிநாட்டிலிருந்து தேர்தலுக்கு முதல் நாளே சென்னைக்கு வந்துவிட வேண்டுமென்று பயண திட்டம் வகுத்திருந்தேன். ஆனால் நானே எதிர்பார்க்காத சூழல், என் பயணத்தை திட்டமிட்டபடி மேற்கொள்ள இயலவில்லை.

என் சூழ்நிலையை விளக்கி அஞ்சல் மூலம், இணையம் மூலம் வாக்களிக்க முடியுமா என அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். சட்டபூர்வமான வழிகள் ஏதும் இல்லை.

மே-16 அன்று தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் வைத்திருந்தேன். அனைவரையும் வாக்களிக்கும்படி வலியுறுத்திவிட்டு, என்னால் செய்ய முடியாமல் போனதிற்காக, அனைவரிடமும், மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமான மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்.

என் மீது அன்பு கொண்ட அனைவரும், என்னை புரிந்து கொள்ளவும், பொறுத்துக்கொள்ளவும் வேண்டுமென பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு சூர்யா தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.