'பசங்க 2' ரிலீஸ்: ரசிகர்களுக்கு சூர்யாவின் அன்பு வேண்டுகோள்

  • IndiaGlitz, [Thursday,December 17 2015]


சமீபத்தில் சென்னை மற்றும் கடலூரில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கோலிவுட் திரையுலகினர் பெரும் உதவி செய்து வந்தனர் என்பதை ஏற்கனவே பல செய்திகளில் பார்த்தோம். குறிப்பாக நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலம் தனிப்பட்ட முறையிலும் நிதியுதவியும் அத்தியாவசிய பொருட்கள் உதவியும் செய்துள்ளார்.

இந்நிலையில் வரும் 24ஆம் தேதி சூர்யாவின் 'பசங்க 2' திரைப்படம் ரிலீஸ் ஆவதையடுத்து தனது ரசிகர்களுக்கு சூர்யா ஒரு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுவதாவது:

சென்னை மற்றும் கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களில் பலர் நேரிடையாக களத்தில் நின்றும் வெளியில் இருந்தும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறீர்கள். உங்களின் மனித நேயப் பணி சிறக்க என் வாழ்த்துக்கள். அன்பின் வெளிப்பாடாக எனக்காக நீங்கள் பேனர்கள் வைப்பதையோ, போஸ்டர்கள் ஒட்டுவதையோ என்றைக்கும் நான் விரும்பியதில்லை. இதை நான் உங்களிடம் பலமுறை நேரிடையாகவே சொல்லியிருக்கின்றேன். வரும் டிசம்பர் 24-ஆம் தேதி வெளியாக உள்ள 'பசங்க 2' திரைப்படத்திற்கு தியேட்டர்களை அலங்கரிக்கும் வேலையைச் செய்யாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்பட தலைமை மன்ற அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள். வீண் செலவுகளை தவிர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளில் ஈடுபடுங்கள்' என்று சூர்யா தனது ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.