சூர்யாவின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா அமலாபால்?

  • IndiaGlitz, [Friday,January 01 2016]

பாண்டியராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'பசங்க -2' திரைப்படம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் இரண்டாவது வாரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் சூர்யா-அமலாபால் ஜோடியின் கெமிஸ்ட்ரி குறித்து நல்ல விமர்சனங்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் அமலாபால் ஒரு திறமையான நடிகை என்றும் அவர் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்றும் சூர்யா தெரிவித்துள்ளார்.


நடிகை அமலாபால் கடந்த 2014ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்த பின்னர் சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்தார். ஆனால் 'பசங்க -2' படத்தின் வாய்ப்பு வந்தபோது குழந்தைகள் படம் என்பதாலும் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாலும் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

அமலாபால் நடிப்பு குறித்து சூர்யா கூறியபோது, 'அமலாபால் ஒரு இயல்பான நடிகை. அவருடைய நடிப்பை பார்த்து உண்மையாகவே நான் வியந்தேன். அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்' என்று கூறியுள்ளார். மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மலையாள படமான 'மிலி' படத்தில் நடித்ததற்காக அவருக்கு விருதும் கிடைத்தது. இதையடுத்து அமலாபால் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா மற்றும் ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று அமலாபால் தொடர்ந்து நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.